

லக்னோ:
பிற நாடுகளை தாக்குவதும், அவர்களுடைய நிலத்தை கைப்பற்றுவதும் இந்தியாவின் குணம் அல்ல என மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் மற்றும் சோதனை மையமும், பிரமோஸ் ஏவுகனை தயாரிப்பு மையமும் கட்டப்படவுள்ளன. இதன் தொடங்க விழாவில் கலந்துக்கொண்டு அடிக்கல் நாட்டிய ராஜ்நாத் சிங் பேசியதாவது:-
எந்த நாடும் இந்தியாவின் மீது தாக்குதல் நடத்த துணிச்சல் வரக்கூடாது என்பதற்காகதான் இந்திய மண்ணில் பிரமோஸ் ஏவுகணைகளை தயாரிக்க விரும்புகிறோம். நம் நாட்டில் இருந்து பிரிந்து சென்ற அண்டை நாடு ஒன்று உள்ளது. அந்த நாடு எப்போதும் இந்தியாவின் மீது தவறான பார்வையை கொண்டிருக்கிறது. உரி மற்றும் புல்வாமா ஆகிய இடங்களில் அந்த நாடு ஈடுபட்ட தீவிரவாத செயல்கள் நமக்கு தெரியும்.
அதற்கு பிறகு நமது பிரதமர் ஒரு முடிவெடுத்தார். அவரது உத்தரவின் பேரில் நாம் அந்த நாட்டில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடத்திற்கே சென்று விமான தாக்குதல்களை வெற்றிகரமாக நடத்தினோம். வேறு யாராவது நம் மீது தாக்குதல் நடத்த விரும்பினால் அவர்கள் இடத்திற்கே சென்று அடிப்போம் என்ற செய்தியை உலகிற்கு கூறினோம். இது தான் இந்தியாவின் பலம்.
இவ்வாறு ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.