search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நியூஸ்க்ளிக் அலுவலகத்திற்கு சீல்: எதிர்கட்சிகள் கடும் கண்டனம்
    X

    நியூஸ்க்ளிக் அலுவலகத்திற்கு சீல்: எதிர்கட்சிகள் கடும் கண்டனம்

    • முற்போக்கு சிந்தனைகளை முன்னெடுத்து 2009ல் தொடங்கப்பட்டது இந்த ஊடகம்
    • சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

    முற்போக்கு சிந்தனைகள் குறித்த விழிப்புணர்வை உருவாக்க இந்தியாவிலிருந்து இயங்கும் இணையதள ஊடகம், நியூஸ்க்ளிக்.

    2009ல் தொடங்கப்பட்ட நியூஸ்க்ளிக், பல்வேறு மக்கள் இயக்கங்கள் மற்றும் போராட்டங்களை குறித்து செய்தியளிப்பதிலும், அரசின் தவறான கொள்கைகள் குறித்து விரிவாக செய்திகளை தருவதிலும் புகழ் பெற்றது. பிபிகே நியூஸ் க்ளிக் ஸ்டுடியோ பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான இந்நிறுவனம் பிரபீர் புர்கயாஸ்தா என்பவரால் நிறுவப்பட்டது.

    இந்நிலையில், நியூஸ்க்ளிக் ஊடகத்தின் அலுவகத்திலும், அதன் பல்வேறு நிரூபர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோரின் இல்லங்களிலும், டெல்லி காவல்துறை சோதனை நடத்தியது. இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு சீனாவிடமிருந்து மறைமுகமாக பணம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல்துறையின் சிறப்பு பிரிவின் மூலமாக நடைபெற்ற இந்த சோதனை, 30 இடங்களில் நடத்தப்பட்டது.

    சோதனை நிறைவடைந்ததை அடுத்து, நியூஸ்க்ளிக் அலுவலகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

    பா.ஜ.க.வின் தலைமையில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக உருவாகிய இந்தியா எதிர்கட்சிகள் கூட்டணி இந்த சோதனைகளை கடுமையாக விமர்சித்துள்ளது.

    அக்கூட்டணி இது குறித்து அறிவித்திருப்பதாவது:

    உண்மையை மக்களிடையே விளக்கி சொல்பவர்களுக்கு எதிராக பா.ஜ.க. தொடர்ந்து செயல்படுகிறது. வன்முறையையும் பிரிவினையையும் தூண்டுபவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. தங்களுக்கு வேண்டிய தொழிலதிபர்கள் ஊடகங்களை கைப்பற்ற உதவுவதற்காக, இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. ஊடகங்கள் பகுப்பாய்வு செய்து புள்ளி விவரங்களோடு அரசின் தவறுகளை வெளியே சொல்வதை இந்த அரசு தடுக்க விரும்புகிறது. உலக அரங்கில் முதிர்ச்சியடைந்த ஜனநாயகம் என கருதப்பட்டு வந்த இந்தியாவிற்கு, இதன் மூலம் பெரும் பின்னடைவு ஏற்பட போகிறது. பிபிசி, நியூஸ் லாண்ட்ரி, டைனிக் பஜார், பாரத் சமாச்சார் மற்றும் வயர் ஆகிய ஊடகங்கள் குறி வைக்கப்பட்ட வரிசையில் நியூஸ்க்ளிக் சேர்ந்துள்ளது.

    இவ்வாறு எதிர்கட்சிகள் கூட்டணி அறிவித்துள்ளது.

    இந்த நடவடிக்கைக்கு எதிராகவும், நியூஸ்க்ளிக் பத்திரிக்கைக்கு ஆதரவாகவும் இந்திய பத்திரிக்கையாளர்கள் சங்கமும் கருத்து தெரிவித்திருக்கிறது.

    Next Story
    ×