search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மனித சங்கிலி போராட்டம்

    • 12 மணி அளவில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஒன்று சேர்ந்து கைக்கோர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.

    அதானி குழுமம் பங்கு மதிப்பை உயர்த்தி காட்டுவதற்காக மோசடியில் ஈடுபட்டதாகவும், இதற்காக வெளிநாட்டு போலி நிறுவனங்களை பயன்படுத்தியதாகவும் அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் கடந்த ஜனவரியில் குற்றம் சாட்டின.

    இதன் எதிரொலியாக அதானி குழும பங்குகள் பெரும் அளவில் சரிவடைந்தன.

    அதானி குழும விவகாரத்தில் மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் பல்வேறு கேள்விகளை எழுப்பி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகளை அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

    பொது மக்களின் பணம் தொடர்புடைய இந்த குற்றச்சாட்டு குறித்து பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பது எதிர்க்கட்சிகள் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

    கடந்த ஜனவரி 31-ல் தொடங்கிய பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் கட்ட அமர்வில் அதானி விவகாரம் வலுவாக எதிரொலித்தது. கடந்த திங்கட்கிழமை தொடங்கிய 2-வது கட்ட அமர்விலும் இந்த விவகாரத்தால் இரு அவைகளும் முடங்கி வருகிறது.

    அதானி குழுமம் மீதான பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்த விரிவான விசாரணை நடத்த கோரி அமலாக்கத் துறை அலுவலகத்தில் புகார் கொடுக்க எதிர்கட்சியினர் நேற்று முடிவு செய்தனர்.

    பாராளுமன்ற வளாகத்தில் இருந்து அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சி எம்.பி.க்கள் பேரணியாக புறப்பட்டனர். 144 தடை உத்தரவு அமலில் உள்ளதை சுட்டிக்காட்டி விஜய் சவுக் பகுதியில் எதிர்கட்சி எம்.பி.க்களான போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    இந்நிலையில் எதிர்கட்சி எம்.பி.க்கள் இன்றும் ஆலோசனை நடத்தினர். பாராளுமன்ற கூட்டம் தொடங்குவதற்கு முன்பு மேல்சபை எதிர்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அலுவலகத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

    இதில் காங்கிரஸ், தி.மு.க., தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாடி, ராஷ்டீரிய ஜனதா கட்சி, பாரத் ராஷ்டீரிய சமிதி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, ஐக்கிய ஜனதா தளம், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ம.தி.மு.க., ஆம். ஆத்மி, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய 15 எதிர்கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலையை சுற்றி எதிர்கட்சி எம்.பி.க்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்துவது முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஜனநாயகத்தை காப்பாற்றுவோம் என்ற செய்தியை முன் வைத்து இந்த மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக எதிர்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

    அதைத்தொடர்ந்து 12 மணி அளவில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஒன்று சேர்ந்து கைக்கோர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள்.

    இந்த கூட்டத்துக்கு பிறகு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறும் போது 'அதானி விவகாரத்தை தடுக்கவே மத்திய அரசு பாராளுமன்றத்தை நடத்த விடவில்லை. நாங்கள் அமைதியாக நேற்று போராட்டம் நடத்தினோம் எங்களை தடுத்துவிட்டனர் என்றார்.

    Next Story
    ×