என் மலர்tooltip icon

    இந்தியா

    கர்நாடகாவில் கனமழைக்கு 7 பேர் உயிரிழப்பு
    X

    கர்நாடகாவில் கனமழைக்கு 7 பேர் உயிரிழப்பு

    • மங்களூரு டவுன் கொட்டார சவுக்கி பகுதியில் ராஜகால்வாயில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
    • நிலச்சரிவில் இருந்து காந்தப்பா பூஜாரி, அவரது மகன் சீதாராம் பூஜாரி ஆகியோர் காயங்களுடன் உயிர் தப்பினர்.

    மங்களூரு:

    கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. 7-வது நாளாக நேற்று தட்சிண கன்னடா உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்தது. நேற்று காலை 8 மணி வரை முடிவடைந்த 24 மணி நேரத்தில் தட்சிண கன்னடா மாவட்டத்தில் 26.44 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.

    மங்களூரு டவுன் கொட்டார சவுக்கி பகுதியில் ராஜகால்வாயில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மங்களூரு டவுனில் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. 1,000-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்திருப்பதாக கூறப்படுகிறது.

    தேரளகட்டே அருகே பெல்மா கிராமத்தில் கனகெரே பகுதியில் வீடு இடிந்து 10 வயது சிறுமி பாத்திமா இறந்தாள். உருமனே கோடி பகுதியில் காதப்பா பூஜாரி(வயது 70) என்பவர் தனது மனைவி பிரேமா(65), மகன் சீதாராம் பூஜாரி(35), மருமகள் அஸ்வினி(30), பேரன்கள் ஆர்யன்(2½), ஆருஷ்(1½) ஆகியோருடன் வசித்து வந்தார். தொடர் கனமழை காரணமாக நேற்று அதிகாலை அப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் காந்தப்பா பூஜாரியின் வீடும் சிக்கி உள்ளது. நிலச்சரிவு ஏற்படும் சத்தம் கேட்டு காந்தப்பா பூஜாரி, அவரது மனைவி பிரேமா, மகன் சீதாராம் பூஜாரி உள்ளிட்டோர் வெளியே ஓடி வந்தனர். அதேபோல் அஸ்வினியும் தனது 2 மகன்களை தூக்கிக் கொண்டு வெளியே ஓடி வர முயற்சித்து உள்ளார்.

    நிலச்சரிவில் இருந்து காந்தப்பா பூஜாரி, அவரது மகன் சீதாராம் பூஜாரி ஆகியோர் காயங்களுடன் உயிர் தப்பினர்.ஆனால் பிரேமா நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தார். அதேபோல் தனது 2 மகன்களையும் தூக்கிக் கொண்டு அஸ்வினி வெளியே ஓடிவரும்போது வீடு நிலச்சரிவில் சிக்கி இடிய ஆரம்பித்தது. இதில் சிக்கி அவரது 2 குழந்தைகளும் உயிரிழந்தனர். அஸ்வினி மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர்களை மீட்கும் பணி 8 மணி நேரம் நடந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தால் நேற்று ஒரேநாளில் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.

    இந்த நிலையில் பெல்தங்கடி தாலுகா உஜ்ஜிரி கிராமத்தைச் சேர்ந்த விஜேஷ் ஜெயின்(27) என்பவர் மின்வாரியத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று அப்பகுதியில் மழையால் சரிந்து விழுந்த மின்கம்பத்தை மீண்டும் சீரமைத்து மின்சார இணைப்பு கொடுக்க முயன்றபோது மின்சாரம் தாக்கி பலியானார்.

    இதேபோல் மங்களூரு அருகே தொட்டபெங்கெரே பகுதியை சேர்ந்த யஷ்வந்த்(38), கமலாக்ஷா(32) ஆகிய 2 பேர் ஒரு சிறிய படகில் அரபிக்கடலில் மீன்பிடிக்க சென்றனர். இந்த நிலையில் கடலில் படகு மூழ்கி அவர்கள் 2 பேரும் பலியானார்கள். இதன்மூலம் நேற்று ஒரேநாளில் தட்சிண கன்னடா மாவட்டத்தில் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×