search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பள்ளி மாணவர்களை கழிவறை தொட்டியை சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியர் உள்பட 2 பேர் கைது
    X

    பள்ளியில் உள்ள கழிவறை தொட்டியை மாணவர்களை கொண்டு சுத்தம் செய்ய வைத்த காட்சி.

    பள்ளி மாணவர்களை கழிவறை தொட்டியை சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியர் உள்பட 2 பேர் கைது

    • பள்ளியில் 250-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தங்கி படித்து வருகிறார்கள்.
    • மாவட்ட சமூக நலத்துறை இணை இயக்குனர் சீனிவாஸ் உண்டு உறைவிட பள்ளிக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் மாலூர் தாலுகா எலவள்ளி கிராமத்தில் மத்திய அரசுக்கு சொந்தமான மொரார்ஜி தேசாய் உண்டு உறைவிட பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 250-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தங்கி படித்து வருகிறார்கள். அங்கு பாரதம்மா என்பவர் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். வார்டனாக மஞ்சுநாத் என்பவர் உள்ளார்.

    இந்த நிலையில் தலைமை ஆசிரியை பாரதம்மா, ஆசிரியர் முனியப்பா மற்றும் வார்டன் மஞ்சுநாத் ஆகியோர் மாணவ-மாணவிகளை அடித்து துன்புறுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனிடையே தலைமை ஆசிரியை பாரதம்மா அந்த பள்ளியில் உள்ள கழிவறை தொட்டியை (செப்டிக் டேங்க்) சில மாணவர்களை கட்டாயப்படுத்தி வைத்து சுத்தம் செய்ய வைத்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

    இதுதொடர்பான வீடியோ வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும், மாவட்ட சமூக நலத்துறை இணை இயக்குனர் சீனிவாஸ் உண்டு உறைவிட பள்ளிக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதுபற்றிய தகவல் அறிந்ததும் கோலார் மாவட்ட கலெக்டர் அக்ரம் பாஷா அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். இந்த நிலையில், மாணவர்களை அடித்து துன்புறுத்தியதாகவும், மாணவர்களை வைத்து கழிவறை தொட்டியை சுத்தம் செய்ய வைத்ததாகவும் மொரார்ஜி தேசாய் உண்டு உறைவிட பள்ளியின் தலைமை ஆசிரியை பாரதம்மா, வார்டன் மஞ்சுநாத், சமூக அறிவியல் ஆசிரியர் அபிஷேக், ஓவிய ஆசிரியர் முனியப்பா ஆகிய 4 பேரை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் அக்ரம் பாஷா உத்தரவிட்டுள்ளார். மேலும் தற்காலிக ஆசிரியர் மரேஷ், ஒப்பந்த பணியாளர் கலாவதி ஆகிய இருவரும் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர்.

    சஸ்பெண்டு செய்யப்பட்ட 4 பேர் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    இந்த சம்பவம் பற்றி தாலுகா சமூக நல அதிகாரி கொடுத்த புகாரின் அடிப்படையில், மஸ்தி போலீசார் கழிவறை தொட்டியை சுத்தம் செய்ய மாணவர்களை ஈடுபடுத்தியதற்காக சஸ்பெண்டு செய்யப்பட்ட தலைமை ஆசிரியை பாரதம்மா, ஆசிரியர்கள் முனியப்பா, அபிஷேக் ஆகியோர் மீது எஸ்.சி., எஸ்.டி சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இதில் தலைமை ஆசிரியை பாரதம்மா, ஆசிரியர் முனியப்பா ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×