search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஞானவாபி மசூதிக்கு சேதம் இல்லாமல் எப்படி ஆய்வு செய்வீர்கள்? விளக்கம் கேட்கிறது உயர் நீதிமன்றம்
    X

    ஞானவாபி மசூதிக்கு சேதம் இல்லாமல் எப்படி ஆய்வு செய்வீர்கள்? விளக்கம் கேட்கிறது உயர் நீதிமன்றம்

    • உச்ச நீதிமன்றம் தடை விதித்ததையடுத்து மசூதியில் அறிவியல் ஆய்வு பணி நிறுத்தப்பட்டது.
    • இடைக்கால தடையை அலகாபாத் உயர் நீதிமன்றம் நாளை வரை நீட்டித்தது.

    உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோவில் அருகே ஞானவாபி மசூதி உள்ளது. முகலாய மன்னர் அவுரங்கசீப் உத்தரவின்பேரில், காசி விஸ்வநாதர் கோவிலின் ஒரு பகுதி இடிக்கப்பட்டு அந்த மசூதி கட்டப்பட்டதாக இந்துக்கள் தரப்பில் கூறப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக இந்துக்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த வாரணாசி நீதிமன்றம், மசூதியில் அறிவியல்பூர்வ ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டது. இந்த ஆய்வு தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொலிகளுடன் ஆகஸ்டு 4-ந்தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

    அதன்படி கடந்த 24ம் தேதி தொல்லியல் துறையை சேர்ந்த 30 பேர் ஆய்வுப் பணிகளை தொடங்கினார்கள். ஆனால், இந்த ஆய்வுக்கு தடை விதிக்க கோரி மசூதி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் வாரணாசி கோர்ட்டு உத்தரவுக்கு 26ம் தேதி வரை இடைக்கால தடை விதித்தது. இதை தொடர்ந்து ஞானவாபி மசூதியில் அறிவியல் ஆய்வு பணி நிறுத்தப்பட்டது.

    இந்த தடை உத்தரவு இன்று மாலையுடன் நிறைவடைந்த நிலையில், இதுதொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், ஞானவாபி மசூதியில் அறிவியல் ஆய்வு நடத்தும் முறை திருப்தி அளிக்கவில்லை என தெரிவித்ததுடன், விசாரணை நாளையும் தொடரும் என தெரிவித்தனர். அத்துடன், ஆய்வுக்கு உச்ச நீதிமன்றம் விதித்த இடைக்கால தடையை நாளை வரை நீட்டித்தனர்.

    மேலும், தற்போதுள்ள மசூதிக்கு சேதம் விளைவிக்காமல் எப்படி ஆய்வு நடத்துவது என்பது குறித்த விவரங்களை வழங்கும்படி தொல்லியல் துறையிடம் நீதிபதிகள் விளக்கம் கேட்டுள்ளனர்.

    இன்றைய விசாரணையின் போது, 1000 ஆண்டுகள் பழமையான மசூதி கட்டிடத்திற்கு கீழே உள்ள நிலத்தை தோண்டினால் இடிந்து விழும் அபாயம் உள்ளது என மசூதியை நிர்வகிக்கும் அஞ்சுமன் இன்டெஜாமியா மஸ்ஜித் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×