

புதுடெல்லி:
தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் மீதான இறக்குமதி வரியை 11சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
கடந்த 2 மாதமாக தங்கம் இறக்குமதி அதிகரித்துள்ள நிலையில் மத்திய அரசு வரியை உயர்த்தியுள்ளது. இறக்குமதி வரியை 4 சதவீதம் அளவுக்கு உயர்த்தி மத்திய நிதியமைச்சகம் அரசாணை வெளியிட்டது.
தங்கம், வெள்ளி மற்றும் விலைமதிப்பற்ற உலோகங்களுக்கான நாணயங்கள் மீது விதிக்கப்பட்ட இறக்குமதி வரியானது தற்போதுள்ள 11 சதவீதத்தில் இருந்து 15 சதவீதம் ஆக உயர்த்தப்படுகிறது என அறிவித்து உள்ளது.
தங்கம் மற்றும் வெள்ளிக் கட்டிகள் மீதான வரி ஏய்ப்புகளைத் தடுப்பதே இதன் நோக்கமாகும். மேலும், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைவதை தடுக்க தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. தங்கத்தின் மீதான இறக்குமதி வரி உயர்வால் இந்தியாவில் தங்கம் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இதேபோன்று, விலைமதிப்பற்ற உலோகங்கள் அடங்கிய வினையூக்கிகள் மீதும் இறக்குமதி வரியானது 14.35 சதவீதம் வரை உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அடிப்படை சுங்க வரி 10 சதவீதம் என்ற அளவிலும், 4.35 சதவீதம் வேளாண் உட்கட்டமைப்பு மேம்பாட்டு வரியாகவும் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றுக்கு கூடுதல் வரியில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வரி விகிதங்கள் ஜனவரி 22-ம் தேதியில் இருந்து நடைமுறைப்படுத்தப்படுகிறது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.