என் மலர்
இந்தியா

தங்கம் கடத்தல் வழக்கில் பாஜக-வுக்கு தொடர்பு இருக்கலாம்?- டி.கே. சிவக்குமார் அதிரடி
- நாங்கள் திருமணங்கள் அல்லது நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது, நூற்றுக்கணக்கான மக்கள் எங்களுடன் போட்டோ எழுத்துக் கொள்கிறார்கள்.
- என்னுடன் யாரோ ஒருவர் போட்டோ எடுத்துக் கொண்டால், அவர் என்னுடன் தொடர்புடையவர் என அர்த்தமா?.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நடிகை ரன்யா ராவ் துபாயில் இருந்து சுமார் 12 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை கடத்தி வரும்போது கர்நாடக மாநில விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். போலீசார் விசாரணைக்குப் பின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ரன்யா ராவ் தங்கம் கடத்தல் வழக்கில் இரண்டு கர்நாடக மாநில அமைச்சர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
இந்த நிலையில் கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், இது வெறும் வதந்திகள்தான். ஆதாரங்கள் தேவை. இந்த விவகாரத்திற்குப்பின் பாஜக-வின் சதித்திட்டம் உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டி.கே. சிவக்குமார் கூறியதாவது:-
ரன்யா ராவ் தங்கம் கடத்தல் விவகாரத்தில் இரண்டு மாநில அமைச்சர்கள் ஈடுபட்டுள்ளனர் என்ற செய்தி வெறும் யூகம்தான். எந்த அமைச்சர்கள் பெயர் வெளியானது? யாராவது பார்த்தீர்கள் அல்லது கேட்டீர்களா?. அரசியல்வாதிகளாகிய நாங்கள் திருமணங்கள் அல்லது நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது, நூற்றுக்கணக்கான மக்கள் எங்களுடன் போட்டோ எழுத்துக் கொள்கிறார்கள். என்னுடன் யாரோ ஒருவர் போட்டோ எடுத்துக் கொண்டால், அவர் என்னுடன் தொடர்புடையவர் என அர்த்தமா?.
என்னுடனோ அல்லது முதல்வருடனோ போட்டோ எடுத்துக் கொண்ட ஒரு நபர், குற்றச்செயலில் ஈடுபட்டால் அவருக்கு நாங்கள் உதவி செய்கிறோம் என்று அர்த்தமா?.
தங்கம் கடத்திய ரன்யா ராவ் உடன் எந்த அமைச்சர்களுக்கு தொடர்பு உள்ளது என்பதை நீங்கள் வெளிப்படுத்துவீர்களா? என முதலமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சரிடம் பாஜக எக்ஸ் பக்க பதிவு மூலம் கேட்டுள்ளது.
ரன்யா தங்கம் கடத்தல் வழக்கில் ஒருவேளை பாஜக-வுக்கு தொடர்பு இருக்கலாம், ஆனால் காங்கிரஸ்க்கு தொடர்பு இல்லை. எந்த அமைச்சரும் இதுபோன்ற ஊழல்களில் ஈடுபட மாட்டார்கள். முதலமைச்சர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
விமான நிலையங்களில் வாட்ச், பெல்ட் என அனைத்தும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. இந்த பரிசோதனைகள் இருக்கும்போது 14 கிலோ தங்கம் கடத்திவரப்பட்டுள்ளது என்பதை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்.
இது பாஜக-வின் சதி திட்டம். இதில் எந்தவொரு அமைச்சரும் ஈடுபடவில்லை என உறுதியாக நம்புகிறேன்.
இவ்வாறு டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.






