கோவா, மணிப்பூர் முதல்வர்கள் பிரதமர் மோடியுடன் சந்திப்பு

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய நான்கு மாநிலங்களிலும் புதிய அரசு பதவியேற்பு விழா அடுத்த வாரம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர்மோடியுடன் பிரமோத் சாவந்த் சந்திப்பு
பிரதமர்மோடியுடன் பிரமோத் சாவந்த் சந்திப்பு
Published on

புதுடெல்லி:

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூரில் ஆட்சியை தக்க வைத்துள்ளதால் தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர். 

இந்நிலையில் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் ஆகியோர் டெல்லியில் இன்று பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அவர்கள் மீது பாஜக தலைமை நம்பிக்கை வைத்து மீண்டும் முதல்வர் ஆக்குவதற்கு வாய்ப்பு உள்ளது.

இந்த சந்திப்பு பற்றி பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மணிப்பூரில் பாஜகவின் அபார வெற்றிக்காக பிரேன் சிங்கிற்கு வாழ்த்து தெரிவித்ததாகவும், மணிப்பூர் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற இன்னும் கடினமாக உழைக்க கட்சி உறுதிபூண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் பிரமோத் சாவந்தை சந்தித்தபின் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கட்சியை வெற்றி பெற வைத்து மீண்டும் சேவை செய்வதற்கான வாய்ப்பை வழங்கிய கோவா மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும், கோவாவின் முன்னேற்றத்திற்கு தொடர்ந்து பாடுபடுவோம் என்றும் கூறி உள்ளார்.

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய நான்கு மாநிலங்களிலும் புதிய அரசு அமைப்பது தொடர்பாக பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் மற்றும் கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்ட உயர்மட்ட தலைவர்கள் கடந்த சில நாட்களாக விரிவான ஆலோசனை மேற்கொண்டனர். அடுத்த வாரம் பதவியேற்பு விழா நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

உத்தர பிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் மீண்டும் பதவியேற்க உள்ளார். உத்தரகாண்ட்டில் புஷ்கர் சிங் தாமி அவரது தொகுதியில் தோல்வி அடைந்ததால் அவருக்கு மீண்டும் முதல்வர் பதவி கொடுக்கப்படுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com