

மும்பை:
காட்கோபரில் வசிக்கும் பவேஷ் சேத், பால் பேரிங்ஸ் வியாபாரம் செய்து வந்தார். இவர்நேற்று மாலை 3.15 மணியளவில் பாந்த்ரா-ஒர்லியை இணைக்கும் கடல் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
அவரது மகன் கொடுத்த தகவலின் பேரில் அங்கு சென்ற பாந்த்ரா போலீசார் சேத் உடலைக் கைப்பற்றினர். இதுகுறித்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக பாந்த்ரா போலீசார் கூறியதாவது:
இறந்தவரின் மகன் மாலை 4:30 மணியளவில் எங்களை அணுகினார். வாட்ஸ்அப் வீடியோ காலில் தந்தை அழைத்ததையும், கடலில் குதித்ததையும் தெரிவித்தார்.
தகவலறிந்து சென்ற தீயணைப்புப் படை அதிகாரிகள் மற்றும் மீட்புக் குழுவினர் நடத்திய 3 மணி நேர தேடுதலுக்குப் பிறகு அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.
ஒரு வாகன ஓட்டியிடம் லிப்ட் கேட்டு பாந்த்ரா-ஒர்லி பாலத்தின் தென் பகுதியில் இறங்கிய அவர், மகனுக்கு வீடியோ கால் செய்து பாலத்தில் இருந்து குதிக்கப் போவதாகவும், குடும்பத்தை பார்த்துக் கொள்ளும்படியும் தெரிவித்துள்ளார். தொழிலில் ஏற்பட்ட கோடிக்கணக்கான நஷ்டம் காரணமாகவே தற்கொலை செய்து கொண்டார் என தெரிவித்தனர்.
தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் மகனுக்கு வீடியோ கால் செய்து தந்தை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.