கங்கனா கன்னத்தில் அறைந்த பெண் காவலருக்கு ஆதரவாக விவசாயிகள் பேரணி

பாஜக அரசுக்கு எதிராக போராடிய விவசாயிகளை காலிஸ்தான் தீவிரவாதிகள் என கங்கனா பேசினார். குல்விந்தர் கவுர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கங்கனா கன்னத்தில் அறைந்த பெண் காவலருக்கு ஆதரவாக விவசாயிகள் பேரணி
Published on

சண்டிகர் விமான நிலையத்தில் வைத்து, மண்டி தொகுதி எம்.பி.யும் பாலிவுட் நடிகையுமான கங்கனா ரனாவத்தை குல்விந்தர் கவுர் என்ற மத்திய தொழிற்பாதுகாப்புப்படை பெண் காவலர் கன்னத்தில் அறைந்த விவகாரம் பூதாகரமாக மாறியுள்ளது.

பாஜக அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப்- ஹரியானா விவசாயிகள் வருடக்கணக்கில் போராட்டம் நடத்தினர். அப்போது பாஜக அரசுக்கு எதிராக போராடிய அனைத்து விவசாயிகளும் தனி நாடு கோரும் காலிஸ்தான் தீவிரவாதிகள் என்று கங்கனா பேசினார். இதன் காரணமாகவே கங்கானா கன்னத்தில் அறைந்ததாக பெண் காவலர் தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து குல்விந்தர் கவுர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பஞ்சாப் விவசாய சங்கங்கள் குல்விந்தர் கவுருக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் குலவுந்தருக்கு ஏதேனும் அநீதி இழைக்கப்பட்டால் மாபெரும் அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளது.

அதன்படி, பெண் காவலர் குல்வீந்தர் கவுர் மீதான வழக்கு நேர்மையான முறையில் விசாரிக்கப்பட வேண்டும் என்று மொகாலில் உள்ள காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தை நோக்கி விவசாயிகள் இன்று பேரணியாக சென்றனர்.

இந்த சம்பவத்துக்கு பிறகு கங்கனா வெளியிட்ட வீடியோவில் பஞ்சாபியர்கள் அனைவரும் காலிஸ்தான் தீவிரவாதிகள் என்ற தொனியில் பேசி மத நம்பிக்கைகளை புண் படுத்தியுள்ளதால் அவர் மீது எப்.ஐ.ஆர் பதிய வேண்டும் என்றும் விவசாய சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com