

கொல்கத்தா:
தமிழ்நாட்டில் டிஜிட்டல் கைது உள்பட சைபர் கிரைம் குற்றங்கள் கடந்த ஆண்டு அதிகளவில் நடந்துள்ளன. இந்த மோசடிகள் மூலம் தமிழ்நாட்டில் உள்ளவர்கள் ரூ.1000 கோடி வரை இழந்திருப்பதாக தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக ஏராளமானவர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் நடந்த விசாரணயில் மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டில் ரூ.1000 கோடி அளவுக்கு சைபர் கிரைம் குற்றங்கள் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் மேற்கு வங்காளத்தில் 8 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள். கொல்கத்தாவில் 5 இடங்களிலும், மாநிலத்தின் மற்ற 3 பகுதிகளிலும் இந்த சோதனை நடந்தது.
வணிக வளாகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகளிலும் சோதனைகள் நடத்தப்பட்டன. இதில் கிடைக்கும் ஆவணங்கள் மூலம் தமிழகத்தில் யார் யாரிடம் எத்தனை லட்சம் ஏமாற்றி மோசடி செய்தனர்? என்பது தெரிய வரும்.