search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தேர்தல் பத்திர விவரங்களை நாளைக்குள் வழங்க வேண்டும்: மனுவை தள்ளுபடி செய்து எஸ்.பி.ஐ.-க்கு கோர்ட்டு அதிரடி உத்தரவு
    X

    தேர்தல் பத்திர விவரங்களை நாளைக்குள் வழங்க வேண்டும்: மனுவை தள்ளுபடி செய்து எஸ்.பி.ஐ.-க்கு கோர்ட்டு அதிரடி உத்தரவு

    • 26 நாட்கள் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்.
    • தேர்தல் பத்திர நன்கொடை தகவல்களை வெளியிட 2 நாட்கள் இருந்த நிலையில் கால அவகாசம் கேட்டு மனுதாக்கல் செய்தது ஏன்?

    வங்கி மூலம் தேர்தல் நன்கொடை பத்திரங்கள் பெறுவது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் 15-ந்தேதி வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியது.

    தேர்தல் நன்கொடை பத்திர முறையை சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு ரத்து செய்தது. இந்த திட்டத்தின் கீழ் நன்கொடை அளித்தவர்களின் முழு விவரங்களை மார்ச் 6-ந்தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) பகிர வேண்டும் என்றும், அவற்றை மார்ச் 13-ந்தேதிக்குள் மக்கள் பார்வைக்காக தேர்தல் ஆணையம் தன்னுடைய இணைய தளத்தில் வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டு இருந்தது. மேலும் தேர்தல் பத்திரங்கள் ஊழலுக்கு வழிவகுக்கும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.

    இதற்கிடையே 2019 ஏப்ரல் முதல் இதுவரையிலும் பணமாக மாற்றப்பட்ட அனைத்து தேர்தல் நன்கொடை பத்திரங்கள் பற்றிய விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்க ஜூன் 30-ந்தேதி வரை கால அவகாசம் கேட்டு பாரத ஸ்டேட் வங்கி கடந்த 4-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.

    இந்த மனு இன்று விசாரணைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதேபோல் தகவல் தர தாமதிக்கும் பாரத ஸ்டேட் வங்கிக்கு எதிராக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.

    இந்த மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, பி.ஆர். கவாய், ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    பாரத ஸ்டேட் வங்கி சார்பில் ஹரீஷ் சால்வே ஆஜரானார். அவர் வாதாடும்போது கூறியதாவது:-

    எங்கள் கோர் பேங்கிங் அமைப்பில் வாங்குபவரின் பெயர் மற்றும் பத்திர எண் இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது ரகசியமாக வைக்கப்பட வேண்டும் என்பதற்காக செய்யப்பட்டது.

    எனவே தகவல்களை கொடுக்க நடவடிக்கை எடுத்து இருக்கிறோம். 55 செயல்முறையையும் நாங்கள் மாற்றி அமைக்க வேண்டும். இதனால் தேர்தல் பத்திர விவரங்கள் கொடுக்க கால அவகாசம் அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் வாதிட்டார்.

    ஹரீஷ் சால்வேயின் இந்த வாதத்தை சுப்ரீம் கோர்ட்டு ஏற்கவில்லை. இது தொடர்பாக நீதிபதிகள் கூறியதாவது:-

    தேர்தல் பத்திர நன்கொடை தகவல்களை வெளியிட உத்தரவிட்டு 26 நாட்கள் ஆகி விட்டது. இந்த 26 நாட்கள் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள். தேர்தல் பத்திர நன்கொடை தகவல்களை வெளியிட 2 நாட்கள் இருந்த நிலையில் கால அவகாசம் கேட்டு மனுதாக்கல் செய்தது ஏன்?

    மிக எளிமையாக திரட்டக்கூடிய இந்த தகவல்களை தருவதற்கு அவகாசம் ஏன்? அதாவது 24-க்கும் குறைவான அரசியல் கட்சிகள்தான் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெற்று உள்ளன.

    அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்புக்கு கால அவகாசம் கேட்பது ஏன்? மிக எளிமையான உத்தரவை பின்பற்ற கால அவகாசம் கோருவதை எந்த வகையில் ஏற்பது. பாரத ஸ்டேட் வங்கியால் செய்ய முடியாத எந்த வேலையையும் நாங்கள் சொல்லவில்லை. அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பை மாற்றுமாறு இப்போது கேட்பது ஏன்?

    கட்சிகளுக்கு நன்கொடை கொடுத்தவர்கள், அவர்களுக்கு இடையிலான தொடர்பு பற்றி எதுவும் கேட்கவில்லை. எஸ்.பி.ஐ. வங்கியிடம் இருந்து நேர்மையான செயல்பாட்டை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

    இந்த பணியை செய்ய எவ்வளவு காலம் ஆகும் என்று வங்கியை கேட்கவில்லை. நாங்கள் தகவல்களை வெளிப்படுத்த வேண்டும் என்று உத்தர விடுகிறோம். தகவல்களை ஒருங்கிணைக்க கால அவகாசம் கேட்பது சரியல்ல.

    இவ்வாறு நீதிபதிகள் காட்டமான கேள்விகளையும், அறிவுறுத்தல்களையும் முன் வைத்தனர்.

    இதைத் தொடர்ந்து கால அவகாசம் கோரிய பாரத ஸ்டேட் வங்கி மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. நாளை மாலைக்குள் தேர்தல் பத்திர நன்கொடை விவரங்களை வெளியிட வேண்டும் என்று எஸ்.பி.ஐ.க்கு சுப்ரீம் கோர்ட்டு அதிரடியான உத்தரவை பிறப்பித்தது.

    பாரத ஸ்டேட் வங்கி பகிர்ந்துள்ள தகவல்களை வருகிற 15-ந்தேதி மாலை 5 மணிக்குள் தேர்தல் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியிட வேண்டும் என்றும் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டது.

    தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் நாளைக்குள் சமர்ப்பிக்க விட்டால் அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்று பாரத ஸ்டேட் வங்கிக்கு சுப்ரீம் கோர்ட்டு எச்சரிக்கை விடுத்தது.

    Next Story
    ×