தர்மேந்திர பிரதானுக்கு ஒடிசாவில் பிரம்மாண்ட வரவேற்பு: எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு!

தொண்டர்கள் அவருக்கு ஆதரவாக பதாகைகளை ஏந்தியும், "தர்மேந்திர பிரதான் ஜிந்தாபாத்" என கோஷமிட்டும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
DHARMENDRA PRADAN
Published on

நீட் தேர்வு முறைகேடு புகார்கள் மற்றும் மாணவர்கள் போராட்டத்தையடுத்து, தனது மத்திய கல்வி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த தர்மேந்திர பிரதான், சொந்த மாநிலமான ஒடிசாவிற்குச் சென்றபோது பாஜக தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் அவருக்கு பதாகைகளை ஏந்தி உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.

ராஜினாமா:

மே மாதம் நடைபெற்ற நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடு புகார்கள் தொடர்பாக டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் தீவிர போராட்டம் நடத்தி வந்தனர். இதன் தொடர்ச்சியாக, மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டும், "தர்மசங்கடமான சூழலைத் தவிர்க்கும் பொருட்டும்" தனது பதவியை ராஜினாமா செய்வதாகக் கூறி, பிரதமர் நரேந்திர மோடியிடம் தர்மேந்திர பிரதான் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.

ஒடிசாவில் உற்சாக வரவேற்பு:

பதவி விலகலுக்குப் பிறகு முதன்முறையாக ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் உள்ள பிஜு பட்நாயக் சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்த தர்மேந்திர பிரதானை வரவேற்பதற்காக, பாஜக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர். தொண்டர்கள் அவருக்கு ஆதரவாக பதாகைகளை ஏந்தியும், "தர்மேந்திர பிரதான் ஜிந்தாபாத்" என கோஷமிட்டும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பாஜகவின் நிலைப்பாடு:

ஒடிசா முதலமைச்சர் மோகன் சரண் மாஜி மற்றும் மாநில பாஜக தலைவர்கள், தர்மேந்திர பிரதானின் இந்த ராஜினாமாவை "நேர்மையான மற்றும் நன்னெறி அடிப்படையிலான நடவடிக்கை" எனப் பாராட்டி, அவரை ஒரு முன்மாதிரித் தலைவராகச் சித்திரிக்கின்றனர்.

எதிர்க்கட்சிகளின் விமர்சனம்:

மாணவர்களின் கடுமையான போராட்டத்துக்குப் பின்னரே அவர் ராஜினாமா செய்த நிலையில், அவருக்கு பாஜகவினர் விழா எடுத்து வரவேற்பு அளிப்பது தவறான முன்மாதிரி என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

X

Maalai Malar
www.maalaimalar.com