டெல்லியில் பெண்ணை கடத்தி 2 நாட்களாக பாலியல் சித்ரவதை- நிர்பயா சம்பவத்தை நினைவூட்டும் கொடூரம்

நிலப்பிரச்சனைக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக பாலியல் சித்ரவதை நடந்திருப்பது தெரியவந்திருக்கிறது.விசாரணை அறிக்கையை விரைவில் தாக்கல் செய்யும்படி காவல்துறைக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
டெல்லியில் பெண்ணை கடத்தி 2 நாட்களாக பாலியல் சித்ரவதை- நிர்பயா சம்பவத்தை நினைவூட்டும் கொடூரம்
Published on

புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் நிர்பயா சம்பவம் போன்று மீண்டும் ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. டெல்லியைச் சேர்ந்த 36 வயது பெண் ஒருவரை, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

காசியாபாத் ஆசிரமம் சாலையில் சாக்கு மூட்டையில் உயிரோடு பெண் ஒருவர் கிடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில், அவர் இரண்டு நாட்களாக கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதும், கொடூரமாக சித்ரவதை செய்யபபட்டதும் தெரியவந்தது.

நந்த் நகரைச் சேர்ந்த அந்த பெண்ணுக்கு சிலருடன் நிலப்பிரச்சனை இருந்ததும், அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த பாலியல் சித்ரவதை நடந்திருப்பதும் தெரியவந்திருக்கிறது.

கடந்த ஞாயிறு அன்று தன் சகோதரர் பிறந்தநாள் விழாவை கொண்டாட வெளியில் சென்ற அந்த பெண், இரவு 9.30 மணியளவில் வீடு திரும்புவதற்காக பேருந்து நிறுத்தம் வந்துள்ளார். பேருந்துக்காக காத்திருந்த அவரை, 5 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்தி 2 நாட்களாக பாலியல் வன்கொடுமை செய்ததுடன், மர்ம உறுப்பில் இரும்பு கம்பியால் குத்தி சித்ரவதை செய்துள்ளனர். பின்னர் அவரது கை, கால்களை கட்டி சாக்குமூட்டையில் வைத்து சாலையில் வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த விவகாரம் மாநில மகளிர் ஆணையத்திற்கு தெரியவர, பூதாகரமாக உருவெடுத்தது. மகளிர் ஆணையம் அழுத்தம் கொடுத்த நிலையில், காவல்துறை தீவிர விசாரணையில் இறங்கியது. தன்னை சீரழித்த 5 பேர் குறித்த தகவலை பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்தார். அவர்களில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணை அறிக்கையை விரைவில் தாக்கல் செய்யும்படி காவல்துறைக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

நிர்பயா சம்பவத்தை மீண்டும் நினைவுபடுத்தும் வகையில் இப்போது நடந்துள்ள பாலியல் வன்கொடுமை சம்பவம் பெண்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com