search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சூனியம் வைத்ததாக சந்தேகம்: தந்தையை கண்காணிக்க மகன் வைத்த கேமிராவில் அம்பலமான கற்பழிப்பு காட்சி
    X

    சூனியம் வைத்ததாக சந்தேகம்: தந்தையை கண்காணிக்க மகன் வைத்த கேமிராவில் அம்பலமான கற்பழிப்பு காட்சி

    • வீடியோ காட்சிகளை அடிப்படையாக வைத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுமியை கற்பழித்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.
    • வீடியோ பதிவு செய்ய பயன்படுத்திய மொபைல் கேமிராவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    டெல்லியில் உள்ள புராரி பகுதியை சேர்ந்த 68 வயது முதியவர் ஒருவருக்கும், அவரது 40 வயது மகனுக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்துள்ளது.

    இந்நிலையில் தந்தை தனக்கு சூனியம் செய்வதாக அவரது மகன் சந்தேகப்பட்டுள்ளார். இதனை கண்டுபிடிப்பதற்காக அவர் வீட்டிலேயே தந்தைக்கு தெரியாமல் அவரை கண்காணிப்பதற்காக வீட்டில் மொபைல் கேமிரா பொருத்தி உள்ளார்.

    இந்நிலையில் அந்த கேமிராவில் பதிவான காட்சிகளை பார்த்த மகனுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது அந்த முதியவர் பக்கத்து வீட்டை சேர்ந்த ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்வது மொபைல் கேமிராவில் பதிவாகி இருந்தது.

    இதை பார்த்த மகன் அதிர்ச்சியடைந்தார். பின்னர் வீடியோவில் இருக்கும் பெண் குறித்து அவர் விசாரித்த போது தான் அது பக்கத்து வீட்டை சேர்ந்த 16 வயது சிறுமி என்பதும், அந்த சிறுமியை முதியவர் ஆசை வார்த்தைகள் கூறி வீட்டுக்கு வரவழைத்து ஒரு அறைக்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது.

    இதையறிந்த முதியவரின் மகன் வீடியோ காட்சிகளை பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தைக்கு அனுப்பி உள்ளார். இதைப்பார்த்து சிறுமியின் தந்தை அதிர்ச்சியடைந்தார்.

    இந்நிலையில் சம்பவம் தொடர்பாக போலீசில் எதுவும் புகார் அளிக்க வேண்டாம் எனவும் அவர் சிறுமியை மிரட்டி உள்ளார். எனினும் சிறுமியின் தந்தை இதுபற்றி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    பின்னர் வீடியோ காட்சிகளை அடிப்படையாக வைத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுமியை கற்பழித்த முதியவரை கைது செய்தனர். மேலும் சிறுமியின் தந்தையை மிரட்டியதாக அவரின் மகனையும் போலீசார் கைது செய்தனர்.

    இதுபற்றி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், கைதான முதியவர் சிறுமியின் குடும்பத்தினருடன் நெருங்கி பழகி வந்துள்ளார். அப்போது சிறுமியிடம் நைசாக பேசி அவரை பலாத்காரம் செய்துள்ளார்.

    கடந்த ஏப்ரல் 20-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. கைதான முதியவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே போல சம்பவத்தை வீடியோ பதிவு செய்து பகிர்ந்ததற்காகவும், அதனை மறைத்து வைத்து மிரட்டியதற்காகவும் அவரது மகனும் கைது செய்யப்பட்டுள்ளார்.

    வீடியோ பதிவு செய்ய பயன்படுத்திய மொபைல் கேமிராவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றார்.

    Next Story
    ×