உயிரிழந்தவரின் 'கண்'-ஐ காணவில்லை என புகார்- எலி கடித்திருக்கலாம் என கூறிய மருத்துவர்கள்

உயிரிழந்தவரின் கண்ணை எலி கடித்திருக்கலாம் என்று மருத்துவமனை ஊழியர்ககள் தெரிவித்தனர்.இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் 'கண்'-ஐ காணவில்லை என புகார்- எலி கடித்திருக்கலாம் என கூறிய மருத்துவர்கள்
Published on

பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள நாளந்தா மருத்துவமனையில் இறந்து போன ஒருவரின் இடதுபக்க கண் காணாமல் போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நவம்பர் 14 அன்று பன்டூஷ் என்ற நபரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக நாளந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நவம்பர் 15 அன்று அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அன்று இரவு அவர் உயிரிழந்தார்.

இதனையடுத்து நேற்று அவரது உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்படவிருந்த நிலையில், அவரது இடது கண் காணாமல் போனதை பார்த்த அவரது உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். அறுவை சிகிச்சை பிளேடு ஒன்று சடலத்துக்கு அருகில் இருந்ததாக உறவினர் ஒருவர் குற்றம் சாட்டினார்.

உயிரிழந்தவரின் கண்ணை எலி கடித்திருக்கலாம் என்று மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த விவகாரத்தில் மருத்துவமனை நிர்வாகம் அலட்சியத்துடன் செயல்பட்டதாக கூறி, பன்டூஷ் குடும்பத்தினர் மருத்துவமனை வளாகத்திற்குள் போராட்டம் நடத்தினர்.

இது தொடர்பாக பேசிய நாளந்தா மருத்துவமனையின் கண்காணிப்பாளர் மருத்துவர் வினோத் குமார், "இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. யாராவது அவர் கண்ணை வெளியே எடுத்திருப்பார்களோ அல்லது எலி கண்ணை கடித்ததா என்ற 2 கோணத்தில் விசாரித்து வருகிறோம். இது இரண்டில் எது நடந்திருந்தாலும் அது தவறு தான். விசாரணைக்கு பின் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, விசாரணை மேற்கொண்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com