

உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு உணவு வழங்குவது தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது உச்சநீதிமன்றம் கூறியதாவது:-
தற்போது நடைபெற்று வரும் செயல்பாட்டின்படி அதிக அளவு ரேசன் பொருட்கள் வழங்குவது தொடரும் என்றால், பருப்பு உள்ளிட்ட தானியங்களுக்கு மத்திய அரசு பொறுப்பு ஏற்கும் என்பதால், மக்களை திருப்திப்படுத்த மாநில அரசுகள் இன்னும் அதிகமான ரேசன் கார்டுகளை வழங்கலாம்.
மாநில அரசுகள்தான் இலவச ரேசன் பொருட்கள் வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டால், பெரும்பாலான மாநிலங்கள் அது எங்களால் முடியாது. இதனால் நிதி நெருக்கடி உருவாகும் எனத் தெரிவிக்கும். அதற்குப் பதிலாக அதிகமான வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு உச்சநீதிமன்றம் தனது கருத்தை தெரிவித்தது.
மேலும், மாநிலங்களில் தொடர்ந்து ரேசன் கார்டுகளை வழங்கினால், அதற்கு மாநிலங்கள் பணம் கொடுக்குமா? என கேள்வி எழுப்பியது.
மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா "மத்திய அரசு கோதுமை மற்றும் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியமான பொருட்களை 80 கோடி மக்களுக்கு தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் (2012) கீழ் வழங்குகிறது என்றார்.
எனினும் வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் "சுமார் 2 முதல் 3 கோடி மக்கள் இன்னும் இந்த திட்டத்திற்கு வெளியில் உள்ளனர்" என்றார்.