

திருவனந்தபுரம்:
இந்திய மக்கள் தொகையை கணக்கில் கொண்டு ரெயில் சேவைகளை அதிகரிக்க வேண்டும் என கேரள காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவிடம் தங்களது கோரிக்கைகள் புறக்கணிக்கப்படுவதாக அக்கட்சி புகார் தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக குரல் கொடுக்க வேண்டும் என பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனிடம் கேரள காங்கிரஸ் உதவி கேட்டிருப்பது சமூக வலைதளங்களில் பேசு பொருளானது.
இதுதொடர்பாக, கேரள காங்கிரஸ் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், அதிக கட்டணம் கொண்ட வந்தே பாரத் ரெயில்கள் பெரும்பாலும் காலியாகவே இயங்கி வருகிறது. இந்திய மக்கள் தொகையை கருத்தில் கொண்டு ரெயில் சேவைகளை அதிகரிக்க வேண்டும் என பதிவிட்டுள்ளது.
மேலும் அந்தப் பதிவில், கொளுத்தும் வெயிலுக்கு நடுவே கூட்ட நெரிசலில் மக்கள் ரெயிலில் பயணிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்ட கேரள காங்கிரஸ், அந்தப் பதிவில் அமிதாப் பச்சனை டேக் செய்துள்ளது.
அதில், மத்திய ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் பிரபலங்களின் கோரிக்கைகளுக்கு உடனே பதிலளிப்பார் என்பதால் சமூக காரணங்களுக்காக இந்த விவகாரம் குறித்து அமிதாப் பச்சன் டுவீட் செய்து குரல் கொடுக்க வேண்டும் எனவும் பதிவிட்டுள்ளது.