டெல்லியில் சி.ஜே.பி போராட்டம்: கலவரத்தில் ஈடுபட்டால் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய காவல்துறை நடவடிக்கை!

சி.ஜே.பி' கட்சி சார்பாக நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
CJP Protest
Published on

டெல்லியில் நடைபெற்ற 'சலோ சன்சாத்' (பாராளுமன்றத்தை நோக்கி பேரணி) போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என டெல்லி காவல்துறை அறிவித்துள்ளது. இதன்படி, கலவரத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்ட நபர்களின் பாஸ்போர்ட்டை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை காவல்துறை விரைவில் தொடங்கவுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் மாணவர் நலன் சார்ந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, 'காக்ரோச் ஜனதா கட்சி' (CJP) சார்பாக பாராளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்தப்பட்டது. ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், பாராளுமன்றத்தை சுற்றியுள்ள பாதுகாப்பு தடுப்புகளை உடைத்து செல்ல முயன்றனர்.

பேரணி கட்டுப்பாட்டை மீறி வன்முறையாக மாறியதை அடுத்து, நிலைமையைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கூட்டத்தைக் கலைத்தனர். இக்கலவரத்தில் பல காவல்துறையினரும், போராட்டக்காரர்களும் காயமடைந்தனர். மேலும், கட்சியின் நிறுவனர் 'அபிஜீத் தீப்கே' உட்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

டெல்லி காவல்துறை கடும் எச்சரிக்கை:

வழக்கமாக பதிவு செய்யப்படும் குற்றவியல் வழக்குகளைத் தவிர்த்து, இந்த முறை கூடுதல் நடவடிக்கையாக கலவரக்காரர்களின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய அல்லது புதிய பாஸ்போர்ட் விண்ணப்பங்களை நிராகரிக்க மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு (RPO) சிபாரிசு செய்ய காவல்துறை திட்டமிட்டுள்ளது.

போராட்டம் என்ற பெயரில் பொதுமக்களின் சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பது மற்றும் அரசு ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது இத்தகைய கடும் நடவடிக்கைகள் தொடரும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாடு தழுவிய போராட்டத்திற்கு சி.ஜே.பி அழைப்பு:

மாணவர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலைக் கண்டித்து, 'சி.ஜே.பி' கட்சி சார்பாக நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் இச்சம்பவம் குறித்து கலவையான விவாதங்கள் உருவாகியுள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com