மாணவர்கள் போராட்டம் விவகாரத்தில் எங்களை இழுக்காதீர்கள்: டெல்லி உயர்நீதிமன்றம்

நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக சென்ற மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது டெல்லி போலீசார் தடியடி நடத்தினர்.
CJP Protest
டெல்லி மாணவர்கள் போராட்டம்
Published on

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP) தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட கல்வி தொடர்பான விவகாரத்தில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று போராட்டம் நடத்தினர். கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக போராட்டம் நடத்தினர்.

நாடாளுமன்றம் முற்றுகை போராட்டம்

நேற்று இந்திய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நடைபெற்றது. அதேவேளையில் நாடாளுமன்றம் முற்றுகையிடப்படும் என கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அறிவித்தது. அதன்படி ஜந்தர் மந்தரில் நேற்று காலை சுமார் 20 ஆயிரம் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கூடினர்.

அவர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் வகையில் பேரணியாக சென்றனர். நாடாளுமன்றம் அருகே சென்றபோது, டெல்லி போலீசார் மற்றும் இந்திய துணை ராணுவம் அவர்களை தடுத்து நிறுத்தியது. தடுப்புகளையும் தாண்டி அவர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி முன்னேறிச் சென்றனர். இதனால் மாணவர்களுக்கு எதிரான போலீசார் தடியடி நடத்தினர். மேலும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி அவர்களை விரட்டியடித்தனர்.

போலீசார் மற்றும் மாணவர்கள் காயம்

இந்த அசாதாரண சூழ்நிலையில் 100-க்கும் அதிகமான போலீசார் மற்றும் மாணவர்கள் காயம் அடைந்தனர். மாணவர்கள் மீது காவல்துறையினர் கடுமையான வகையில் தாக்குதல் நடத்தியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டினர்.

இதற்கிடையே மாணவர்களுக்கு எதிரான அடக்குமுறையை கண்டிக்க வேண்டும். போலீசாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை அவசர வழக்காக எடுத்து விசாரணை நடத்த வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

அவசர மனுவாக விசாரிக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு

இந்த மனுவை அவசர மனுவாக விசாரிக்க வேண்டும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அவசர மனுவாக விசாரிக்க மறுத்து விட்டது. மேலும், இதில் தங்களை இழுக்க நாங்கள் விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளது.

நீதிபதிகள் டி.கே. உபத்யாயா மற்றும் தேஜாஸ் கரியா அடங்கிய பெஞ்ச் இவ்வாறு தெரிவித்துள்ளது. இது விவகாரம் தொடர்பாக நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள பட்டியலிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் டெல்லி போலீசார், மாணவர்களுக்கு எதிராக மிக அதிகமான அடக்குமுறையை கையாண்டது எனக் குறிப்பிட்டிருந்தார்.

நேற்று மாலை கரப்பான் பூச்சி ஜனதா கட்சியைச் சேர்ந்த இரண்டு செய்தி தொடர்பாளர்கள் மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டாவை சந்தித்து பேசினர். அப்போது தர்மேந்திர பிரதானை நீக்க வேண்டும் உள்ளிட்ட 3 கோரிக்கைகளை முன்வைத்தனர். 3 கோரிக்கைகளையும் ஏற்றுக் கொண்டார் போராட்டத்தை கைவிட தயார் என்றனர்.

இன்று காலையும் பாராளுமன்றம் நோக்கி பேரணியாக செல்வோம் என கரப்பான் பூச்சி ஜனதா தளம் தெரிவித்திருந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com