search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தலைமை நீதிபதி இல்லாமல் தேர்தல் ஆணையர் நியமன குழு: புதிய மசோதா மாநிலங்களவையில் தாக்கல்
    X

    தலைமை நீதிபதி இல்லாமல் தேர்தல் ஆணையர் நியமன குழு: புதிய மசோதா மாநிலங்களவையில் தாக்கல்

    • உச்ச நீதிமன்ற பரிந்துரையின்படி இக்குழுவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, பிரதமர் மற்றும் எதிர்கட்சி தலைவர் உறுப்பினர்களாக இருப்பார்கள்
    • புதிய மசோதாவின்படி, இக்குழுவில் ஒரு கேபினெட் அமைச்சர், பிரதமர் மற்றும் எதிர்கட்சி தலைவர் உறுப்பினர்களாக இருப்பார்கள்

    இந்தியாவின் அரசியலமைப்பின்படி நிர்வாகம் (Executive), பாராளுமன்றம் (Legislature) மற்றும் நீதித்துறை (Judiciary) மூன்றும் முக்கியமான அங்கங்கள். அவ்வப்போது இவற்றிற்கிடையே கருத்து வேறுபாடுகள் உருவாவதுண்டு.

    அத்தகைய ஒரு சூழ்நிலையை தோற்றுவிக்க கூடிய ஒரு சட்டத்திற்கான மசோதா இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.

    இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் இதர மாநில தேர்தல் ஆணையர்கள் ஆகியோரின் நியமனம், சேவைக்கான நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம் சம்பந்தமான ஒரு புதிய மசோதா இன்று மாநிலங்களைவையில் அறிமுகப்படுத்தப்படுகிறது.

    இதன்படி பிரதமர், எதிர்கட்சி தலைவர், மற்றும் பிரதமர் பரிந்துரைக்கும் ஒரு மத்திய கேபினெட் அமைச்சர் ஆகிய மூவரை கொண்ட ஒரு குழு அமைக்கப்படும். இதற்கு பிரதமர் தலைவராக இருப்பார். இக்குழு பரிந்துரைக்கும் நபர்களை இந்திய ஜனாதிபதி தலைமை தேர்தல் ஆணையர்களாகவும், மாநில தேர்தல் ஆணையர்களாகவும் நியமனம் செய்வார்.

    ஆனால் இது சம்பந்தமாக கடந்த மார்ச் மாதம் உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு பெஞ்ச் ஒரு தீர்ப்பை வழங்கியிருந்தது.

    அந்த தீர்ப்பில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, பிரதமர் மற்றும் எதிர்கட்சி தலைவர் ஆகியோர் கொண்ட ஒரு குழுவை உருவாக்கி அதன் பரிந்துரைகளின்படி ஜனாதிபதி நியமனங்களை செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது. பாராளுமன்றம் இந்த நியமனங்களில் ஒரு சட்டம் கொண்டு வரும் வரை இந்த முறையே தொடர வேண்டும் எனவும் அது தெரிவித்திருந்தது.

    தற்போதைய இந்த மசோதா, அந்த தீர்ப்பை நீர்த்து போக செய்யும் விதமாக உள்ளதாக அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

    நீதிபதிகளின் நியமனத்திலிருந்து புதுடெல்லிக்கான சேவைகள் சட்டம் வரை நீதித்துறைக்கும், மத்திய அரசாங்கத்திற்கும் இடையே பல கருத்து வேறுபாடுகள் நிலவி வரும் பின்னணியில் இந்த புதிய மசோதா அத்தகைய வேறுபாடுகளை தீவிரமடைய செய்யலாம் என அரசியல் நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

    Next Story
    ×