search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    5 மாநில சட்டசபை தேர்தல் தேதிகள் அறிவிப்பு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    5 மாநில சட்டசபை தேர்தல் தேதிகள் அறிவிப்பு

    • 5 மாநிலங்களில் இவ்வருட இறுதிக்குள் சட்டசபை காலம் நிறைவடைகிறது
    • 5 மாநிலங்களிலும் மொத்தம் 16.1 கோடி வாக்காளர்கள் உள்ளனர்

    இந்தியாவில் அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.

    இதற்கிடையே, தெலுங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை காலம் வரும் டிசம்பர் முதல் அடுத்த ஆண்டு ஜனவரி இறுதிக்குள் நிறைவடைகிறது.

    அந்த 5 மாநிலங்களில் நடைபெற வேண்டிய 2023க்கான சட்டசபை தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டு வந்தது. வாக்காளர் பட்டியல் தயாரிப்பதிலிருந்து கட்டமைப்பு வசதிகளின் தேவை உள்ளிட்ட முக்கிய ஏற்பாடுகளை செய்வது வரை தீவிரமாக ஈடுபட்டு வந்தது.

    அதே நேரம் இம்மாநிலங்களில் தேர்தலை எதிர்நோக்கியுள்ள கட்சிகளும் தங்கள் பிரச்சாரத்தை தொடங்கி விட்டன.

    தேர்தல் தேதிகளுக்கான அட்டவணையை தற்போது தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கிறது.

    இன்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் இதனை வெளியிட்டார். தேர்தலை அமைதியாக நடத்த உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க முழுமையான கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

    இம்முறை சத்தீஸ்கரில் மட்டும் 2 கட்டங்களாகவும் பிற 4 மாநிலங்களில் ஒரே கட்டமாகவும் தேர்தல் நடைபெறவுள்ளது.

    5 மாநிலங்களிலும் மொத்தம் உள்ள 16.1 கோடி வாக்காளர்களில் 60.2 லட்சம் முதன்முறை வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்களில் 8.2 கோடி பேர் ஆண் வாக்காளர்கள்; 7.8 கோடி பேர் பெண் வாக்காளர்கள்.

    மொத்தம் 1.79 லட்சம் வாக்கு சாவடிகள் அமைய உள்ளன. இவற்றில் 1 கோடியே 1 லட்சம் வாக்குச் சாவடிகளில் பதிவாகும் வாக்குகளை நேரில் கண்காணிக்க "வெப் கேமிரா" (web camera) அமைக்கப்பட உள்ளது.

    மிசோரமில் நவம்பர் 7-ஆம் தேதி ஓட்டுப்பதிவு நடத்தப்படும். மிசோரத்தில் வருகிற 13-ந்தேதி தேர்தல் அறிவிக்கை வெளியிடப்படும். அன்றே மனுதாக்கல் தொடங்குகிறது. மனுதாக்கல் செய்ய கடைசி நாள் வருகிற 20-ந்தேதி ஆகும்.

    சத்தீஸ்கரில் நவம்பர் 7 மற்றும் நவம்பர் 17 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும். முதல் கட்டத்துக்கான தேர்தல் அறிக்கை வருகிற 13-ஆம்தேதியும், இரண்டாம் கட்டத்துக்கான தேர்தல் அறிகை 21-ஆம் தேதியும் வெளியிடப்படும்.

    மத்திய பிரதேசத்தில் நவம்பர் 17 அன்று தேர்தல் நடைபெறும். வருகிற 21-ஆம் தேதி தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். 30-ஆம் தேதி வரை மனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்படும்.

    ராஜஸ்தானில் நவம்பர் 23 அன்று தேர்தல் நடைபெறும். வருகிற 30-ஆம் தேதி தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். அன்று தொடங்கி நவம்பர் 6 வரை வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்யலாம்.

    தெலுங்கானாவில் நவம்பர் 30-ஆம் தேதி தேர்தல் நடைபெறும். நவம்பர் 3-ஆம் தேதி தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். அன்று தொடங்கி நவம்பர் 10-ஆம் தேதி வரை மனுதாக்கல் செய்யலாம்.

    ஐந்து மாநிலங்களிலும் டிசம்பர் 3-ஆம் தேதி, பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும்..

    5 மாநிலங்களிலும் உள்ள தற்போதைய சட்டசபை நிலவரம்:

    தெலுங்கானா - மொத்த இடங்கள்: 119 - ஆளும் கட்சி: பாரத் ராஷ்ட்ரிய சமிதி

    மத்திய பிரதேசம் - மொத்த இடங்கள்: 230 - ஆளும் கட்சி: பா.ஜ.க.

    சத்தீஸ்கர் - மொத்த இடங்கள்: 90 - ஆளும் கட்சி: காங்கிரஸ்

    ராஜஸ்தான் - மொத்த இடங்கள்: 200 - ஆளும் கட்சி: காங்கிரஸ்

    மிசோரம் - மொத்த இடங்கள்: 40 - ஆளும் கட்சி: மிசோ தேசிய முன்னணி

    இம்முறை ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்பதில் பாரதீய ஜனதா தீவிரமாக உள்ளது. அதே போல் மத்திய பிரதேசத்தை கைப்பற்ற காங்கிரஸ் தீவிரமாக உள்ளது.

    ஐந்து மாநில தேர்தல்கள் முடிந்த 4 மாதங்களில் பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. எனவே 5 மாநில தேர்தல்கள் அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது.

    இதன் காரணமாக 5 மாநில தேர்தல் முடிவை நாட்டு மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.

    Next Story
    ×