search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    முன்னாள் கவர்னர் சத்யபால் மாலிக் வீட்டில் சி.பி.ஐ. சோதனை
    X

    முன்னாள் கவர்னர் சத்யபால் மாலிக் வீட்டில் சி.பி.ஐ. சோதனை

    • சத்யபால் மாலிக் லஞ்சம் பெற்றிருக்கலாம் என்று புகார் எழுந்ததை தொடர்ந்து டெல்லி, காஷ்மீரில் உள்ள 8 இடங்களில் கடந்த மாதம் சி.பி.ஐ. சோதனை நடந்தது.
    • நான் ஒரு விவசாயியின் மகன். இந்த சோதனைகளுக்கு பயப்பட மாட்டேன்.

    புதுடெல்லி:

    ஜம்மு-காஷ்மீர் முன்னாள் கவர்னர் சத்யபால் மாலிக். கடந்த 2018 ஆகஸ்ட் முதல் 2019 அக்டோபர் வரை அவர் அங்கு கவர்னராக பணியாற்றினார்.

    காஷ்மீர் கவர்னராக சத்யபால் மாலிக் இருந்தபோது 2 கோப்புகளில் கையெழுத்துப் பெறுவதற்காக தனக்கு ரூ.300 கோடி லஞ்சம் தர முயன்றனர் என்று அவர் ஏற்கனவே கூறியிருந்தார்.

    இந்த 2 கோப்புகளில் ஒன்று ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் மாவட்டத்தில் செனாப் ஆற்றில் இருந்து 624 மெகா வாட் நீர்மின் உற்பத்திக்கான ஒப்புதல் கோப்பாகும்.

    நீர்மின்சாரத் திட்ட முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.

    இந்த திட்டத்தில் சத்யபால் மாலிக் லஞ்சம் பெற்றிருக்கலாம் என்று புகார் எழுந்ததை தொடர்ந்து டெல்லி, காஷ்மீரில் உள்ள 8 இடங்களில் கடந்த மாதம் சி.பி.ஐ. சோதனை நடந்தது.

    இந்த நிலையில் காஷ்மீர் முன்னாள் கவர்னர் சத்யபால் மாலிக் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினார்கள். குர்கிராம், பாக்பத், டெல்லி ஆர்.கே.புரம் மற்றும் ஆசிய விளையாட்டு கிராமத்தில் இருக்கும் அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    சத்யபால் மாலிக்குக்கு நெருக்கமான செனாப் வேலி நிறுவன முன்னாள் தலைவர் நவீன் குமார் சவுத்ரி மற்றும் படேல் என்ஜினீயரிங் நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

    ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், பீகார், உத்தரபிரதேசம், டெல்லி, மும்பை ஆகிய பகுதிகளில் உள்ள 30 இடங்களில் இந்த அதிரடி சோதனையை சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்தினார்கள்.

    100-க்கும் மேற்பட்ட சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று காலை முதல் இந்த சோதனையை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சோதனையின்போது பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த சோதனையின் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரி ஒருவர் கூறும்போது, 2019-ம் ஆண்டில் கிரு நீர்மின்சாரத் திட்டத்தில் ஒரு தனியார் நிறுவனத்திற்கு சுமார் 2,200 கோடி மதிப்பிலான குடிமராமத்து பணி களை ஒப்பந்தம் செய்ததில் முறைகேடு நடந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

    ஒரே நேரத்தில் 30 இடங்களில் இன்று நடத்தப்பட்ட இந்த சோதனை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த சோதனை தொடர்பாக சத்யபால் மாலிக் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 3 முதல் 4 நாட்களாக நான் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளேன். ஆனாலும் எனது வீட்டை சர்வாதிகாரி அரசு நிறுவனங்கள் மூலம் சோதனை செய்கிறார்கள். எனது டிரைவர் மற்றும் உதவியாளரையும் சோதனை செய்து தேவையில்லாமல் துன்புறுத்துகிறார்கள்.

    நான் ஒரு விவசாயியின் மகன். இந்த சோதனைகளுக்கு பயப்பட மாட்டேன். நான் விவசாயிகளுடன் இருக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சத்யபால் மாலிக் சமீப காலமாக மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×