

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள புகழ்பெற்ற பர்கத்துல்லா பல்கலைக்கழகத்தின் பெயரை அம்மாநில பாஜக அரசு, வாக்தேவி போஜ்பால் பல்கலைக்கழகம் என மாற்றியுள்ளது.
போபாலைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட தியாகியான முகமது பர்கத்துல்லா போபாலி நினைவாக, கடந்த 1988-ஆம் ஆண்டில் இந்தத் பல்கலைக்கழகத்திற்கு அவரது பெயர் சூட்டப்பட்டது.
தற்போது வைக்கப்பட்டுள்ள 'வாக்தேவி' என்ற பெயர் இந்து மதக் கடவுளான சரஸ்வதியைக் குறிக்கிறது. மேலும் இந்து மன்னரான போஜராஜன், போஜ்பால் என்றும் அழைக்கப்படுகிறார்.
11ஆம் நூற்றாண்டில் மத்திய இந்தியாவின் மால்வா பிராந்தியத்தை மன்னர் போஜராஜன் ஆண்டுள்ளார்.
அவர்தான் போபால் நகரத்தை நிறுவினார் என்றும் கூறப்படுகிறது. எனவே, போபால் நகரின் வரலாற்று மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் நோக்கில் இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போபாலில் கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு முக்கிய இடங்களின் பெயர்கள் தொடர்ந்து மாற்றப்பட்டு வருகின்றன.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், போபாலின் கடைசி நவாபான ஹமீதுல்லா கான் பெயரில் இருந்த மூன்று கல்வி நிறுவனங்களின் பெயர்களை மாற்றுவதற்கான தீர்மானத்தைப் போபால் மாநகராட்சி நிறைவேற்றியது.
போபாலில் உள்ள ஹபீப்கஞ்ச் ரயில் நிலையத்தின் பெயர், 18ஆம் நூற்றாண்டில் இப்பகுதியை ஆண்ட கோண்ட் பழங்குடியின ராணியான ராணி கமலாபதி ரயில் நிலையம் என மாற்றப்பட்டது.
கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் மட்டும், போபால் மாவட்டத்திற்கு உட்பட்ட 11 கிராமங்களின் பெயர்களை மாநில அரசு அதிரடியாக மாற்றம் செய்தது குறிப்பிடத்தக்கது.