

அசாம் பெருவெள்ளம் மாநிலத்தில் தொடரும் கனமழை மற்றும் பெருவெள்ளம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 14 பேர் உயிரிழந்த நிலையில், வெள்ளத்திற்கு பலியானோரின் மொத்த எண்ணிக்கை '61' ஆக உயர்ந்துள்ளது. அம்மாநிலத்தின் 12 மாவட்டங்களைச் சேர்ந்த '7.05 லட்சத்திற்கும்' அதிகமான மக்கள் பெருவெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளப் பெருக்கு காரணமாக இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், சிவசாகர் மாவட்டத்தில் ஒருவர் காணாமல் போயுள்ளார். 37 வருவாய் வட்டங்களில் உள்ள 856 கிராமங்களைச் சேர்ந்த '7,05,000-க்கும் மேற்பட்டோர்' வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். மாநில அரசால் அமைக்கப்பட்ட 363 நிவாரண முகாம்களில் 3.15 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தஞ்சம் அடைந்துள்ளனர்.
அவர்களுக்கு உணவு, தப்பிப்பிழைப்பதற்கான அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தேசிய பேரிடர் மீட்புப் படை , மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் உள்ளூர் அதிகாரிகள் இணைந்து கடந்த 24 மணி நேரத்தில் வெள்ளத்தில் சிக்கிய சுமார் 1,000 பேரை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
அசாமில் பல மாவட்டங்கள் நீரில் மூழ்கியுள்ள நிலையில், சிவசாகர், சரைடியோ, ஜோர்ஹாட் 3 ஆகிய மாவட்டங்கள் மிக மோசமான பாதிப்பைச் சந்தித்துள்ளன. மேலும் கோலாகாட், திப்ரூகர், ஹோஜாய், நகோன், பிஸ்வநாத், தேமாஜி, சோனித்பூர், கம்ரூப் (மெட்ரோ) மற்றும் கர் பி ஆங்லாங் ஆகிய மாவட்டங்களிலும் வெள்ளநீர் சூழ்ந்து இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
மேலும், சுமார் 56,606 ஹெக்டேர் விவசாய நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கி, பயிர்கள் பெருமளவில் சேதமடைந்துள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 17,107 கால்நடைகள் மற்றும் கோழிகள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. மேலும் 3.34 லட்சத்திற்கும் அதிகமான கால்நடைகள் தீவனமும் தங்குமிடமும் இன்றி பாதிக்கப்பட்டுள்ளன.
அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெர்கான் பகுதியில் அமைக்கப்பட்ட நிவாரண முகாமிற்கு நேரில் சென்று மீட்புப் பணிகளைப் பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வெள்ள நிலைமை மிகவும் தீவிரமாக உள்ளது. இறப்பு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும்.
பக்கத்து மாநிலமான நாகாலாந்தில் ஏற்பட்ட திடீர் மேகவெடிப்பு காரணமாகவே அசாமின் பல மாவட்டங்களில் இந்த அளவுக்குப் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டார். தற்போது பிரம்மபுத்திரா நதியும் அதன் துணை நதிகளும் பல இடங்களில் அபாயக் கட்டத்தைத் தாண்டிப் பெருக்கெடுத்து ஓடுவதால், மீட்புக் குழுவினர் தொடர்ந்து தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.