search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மணிப்பூர் விவகாரத்தை விவாதிக்காமல் எதிர்க்கட்சிகள் ஓட்டம்- மத்திய மந்திரி தாக்கு
    X

    மணிப்பூர் விவகாரத்தை விவாதிக்காமல் எதிர்க்கட்சிகள் ஓட்டம்- மத்திய மந்திரி தாக்கு

    • துரதிர்ஷ்டவசமாக மணிப்பூர் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் அரசியல் கண்ணாடி மூலம் பார்க்கின்றன.
    • ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களிலும் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் நடக்கின்றன.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதில் மணிப்பூர் பிரச்சினையை விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் இரு அவைகளும் முதல் நாளிலேயே முடங்கின.

    எதிர்க்கட்சிகளின் இந்த செயலுக்கு மத்திய மந்திரிகள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

    பாராளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாகூர், இது தொடர்பாக கூறியதாவது:-

    துரதிர்ஷ்டவசமாக மணிப்பூர் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் அரசியல் கண்ணாடி மூலம் பார்க்கின்றன. அத்துடன் இதை அரசியலாக்கவும் முயற்சிக்கின்றன.

    மணிப்பூர் நிலைமை குறித்து விவாதிக்க தயார் என நாங்கள் கூறிவிட்டோம். ஆனால் இது குறித்து விவாதிக்காமல் எதிர்க்கட்சிகள் ஓட்டம் எடுக்கின்றன.

    ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களிலும் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் நடக்கின்றன. ஆனால் சோனியா, ராகுல் மற்றும் எதிர்க்கட்சிகள் மவுன பார்வையாளர்களாக கடந்து விடுகின்றன. ஒரேயொரு மாநிலத்துக்காக (மணிப்பூர்) கண்ணீர் வடிக்கின்றனர்.

    பெண்களுக்கு எதிரான குற்றங்களில் நீங்கள் எப்படி மாநிலங்களுக்கு இடையே பாகுபாடு காட்ட முடியும்? பெண்களை அரசியல் ஆயுதமாக மட்டுமே நீங்கள் பார்க்கிறீர்கள்.

    மணிப்பூர் விவகாரத்தை விவாதிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் விவாதிக்காமல் ஏன் ஓடுகிறீர்கள்? ராஜஸ்தானில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு சோனியா, ராகுல் ஆகியோரும் பதிலளிக்க வேண்டும்.

    இவ்வாறு அனுராக் தாகூர் தெரிவித்தார்.

    மத்திய மந்திரி பியூஸ் கோயல் கூறுகையில், 'மணிப்பூர் பிரச்சினையில் விவாதத்துக்கு தயாராக இருப்பதாக அரசு தெளிவாக கூறியபோதும், காங்கிரசும் பிற எதிர்க்கட்சிகளும் பாராளுமன்ற அலுவல்களை முடக்கியுள்ளன. சபையை செயல்பட விடக்கூடாது என்ற முடிவோடுதான் அவர்கள் வந்துள்ளனர் என்பது எதிர்க்கட்சிகளின் இந்த அணுகுமுறையில் இருந்து தெரிகிறது' என குற்றம் சாட்டினார்.

    மேற்கு வங்காள உள்ளாட்சி தேர்தல் வன்முறை மற்றும் சத்தீஷ்கார், ராஜஸ்தானில் நடைபெறும் துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் காரணமாக எதிர்க்கட்சிகள் மனதில் கவலை இருக்கலாம் என்றும் அவர் சாடினார்.

    இதைப்போல மணிப்பூர் பிரச்சினையில் பாராளுமன்றத்தை முடக்கிய எதிர்க்கட்சிகளுக்கு பா.ஜனதாவும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

    இது தொடர்பாக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் கூறும்போது, 'இன்று நாம் ஜூலை மாதத்தில் இருக்கிறோம். ஆனால் மே முதல் வாரத்தில் நடந்த ஒரு சம்பவம், பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முந்தைய நாள் டுவிட்டரில் வெளியாகி இருக்கிறது. இதன் மர்மம் தொடர்பாக எனது மனதில் பல கேள்விகள் எழுகின்றன' என தெரிவித்தார்.

    மேலும் அவர், 'மணிப்பூர் சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. இதனால் நாங்கள் அனைவரும் கவலையில் ஆழ்ந்துள்ளோம். ஆனால் இந்த விவகாரத்தை விவாதிக்க தயாராக இருக்கிறோம் என மத்திய மந்திரிகள் பாராளுமன்றத்தில் அறிவித்தபோதும், காங்கிரசும், எதிர்க்கட்சிகளும் விவாதத்துக்கான விதிகளுக்கு வாதம் செய்கிறார்கள். அப்படியானால் இந்த சம்பவங்கள் உங்களுக்கு முக்கியமில்லை, விதிகள்தான் முக்கியமா' என்றும் கேள்வி எழுப்பினார்.

    Next Story
    ×