ஆந்திராவில் திடீர் மவுசு- மண்புழு கடத்தி கிலோ ரூ.6 ஆயிரத்துக்கு விற்பனை

ஏரியில் கிடைக்கும் மண்புழுக்கள் சுமார் பத்து சென்டி மீட்டர் முதல் அரை மீட்டர் வரை நீளத்தில் கிடைக்கிறது.சேகரிக்கப்படும் மண் புழுக்கள் நெல்லூரில் இருந்து கோதாவரிக்கு கொண்டு செல்லப்படுகிறது.
ஆந்திராவில் திடீர் மவுசு- மண்புழு கடத்தி கிலோ ரூ.6 ஆயிரத்துக்கு விற்பனை
Published on

திருப்பதி:

ஆந்திர மாநிலம், சூளூர்பேட்டையில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு ஆட்டோவில் மண்புழுக்கள் கடத்தப்படுவதாக மாவட்ட வன அலுவலர் சாமுவேலுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் குருகுல பள்ளியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.

ஆட்டோவில் 12 பெட்டிகளில், 27 கிலோ எடையுள்ள மண்புழுக்கள் கடத்தி செல்வது தெரிய வந்தது. இதையடுத்து வனத்துறையினர் ஆட்டோவில் வந்த நபரையும் ஆட்டோ டிரைவரையும் கைது செய்தனர்.

புலிகாட் ஏரியில் தமிழகத்திலும் ஆந்திராவில் ராயடோருன், கொண்டுரு பாலம், வேணாறு, இரகம், வாட்டம் பேடு, தடா உள்ளிட்ட இடங்களில் மண்புழு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

புலிகாட் ஏரிக்கு படகுகளில் செல்லும் மீனவர்கள் படகை ஏரியின் நடுவில் நிறுத்திவிட்டு தண்ணீரில் மூழ்கி ஒன்று முதல் மூன்று சென்டிமீட்டர் வரை சேற்றை அகற்றி அதில் இருந்து மண்புழுக்களை சேகரிக்கின்றனர்.

ஏரியில் கிடைக்கும் மண்புழுக்கள் சுமார் பத்து சென்டி மீட்டர் முதல் அரை மீட்டர் வரை நீளத்தில் கிடைக்கிறது. இங்கு கிடைக்கும் மண்புழுக்கள் இறால் தொழிலுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

தொழிலாளர்களால் சேகரிக்கப்படும் மண்புழுக்களை கடத்தல்காரர்கள் கிலோ ரூ. 5 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் வரை விற்பனை செய்கின்றனர்.

இதே போல் கடலோர பகுதிகளில் வசிக்கும் மீனவர்கள் மீன்பிடி தொழில் இல்லாத நிலையில் வேறு தொழில் செய்ய முடியாது.

இதனால் சுமார் 500 தொழிலாளர்கள் இந்த தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.

ஒரு நாளைக்கு ஒரு மீனவர் 2 கிலோ மண்புழு வரை சேகரிக்கிறார். அதன்படி ஒரு நாளைக்கு ஒரு டன் மண்புழுக்கள் சேகரிக்கப்படுகிறது.

இங்கு சேகரிக்கப்படும் மண் புழுக்கள் நெல்லூரில் இருந்து கோதாவரிக்கு கொண்டு செல்லப்படுகிறது.

பேக்கிங் செய்து அந்தந்த பகுதிகளுக்கு கார்களில் கடத்திச் செல்வது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மண்புழு சேகரிக்கும் பணியில் ஈடுபடுவது வனத்துறையினருக்கு தெரிந்தும் அவர்கள் ஒரு படகிற்கு ரூ.1000 வீதம் பணம் வசூலித்து கொண்டு கண்டும் காணாமல் இருப்பதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com