களரி பயிற்சிக்கு வந்திருந்த அமெரிக்க பெண் பலாத்காரம்- ஆசிரியர் கைது

அமெரிக்க பெண்ணுக்கு அவர் களறி பயிற்சி அளித்திருக்கிறார்.கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் பலமுறை அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
களரி பயிற்சிக்கு வந்திருந்த அமெரிக்க பெண் பலாத்காரம்- ஆசிரியர் கைது
Published on

திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் தற்காப்பு கலை பயிற்சி மையங்கள் ஏராளமாக செயல்பட்டு வருகின்றன. அந்த மையங்களில் தற்காப்பு கலைகளை கற்றுக்கொள்ள கேரள மாநிலத்தினர் மட்டுமின்றி, சுற்றுலா வரக்கூடிய வெளிமாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் செல்கிறார்கள்.

அதேபோன்று கண்ணூர் டவுன் அருகே செயல்பட்டு வரும் பாரம்பரிய கலைகள் கற்பித்து கொடுக்கும் மையம் ஒன்றுக்கு களரி பயிற்சி பெறுவதற்காக 43 வயது மதிக்கத்தக்க அமெரிக்க பெண் ஒருவர் வந்திருக்கிறார். அந்த மையத்தை கண்ணூர் மாவட்டம் தோட்டா பகுதியை சேர்ந்த சுஜித்(வயது53) என்பவர் நடத்தி வந்திருக்கிறார்.

அந்த மையத்தில் களரி பயிற்சி ஆசிரியராகவும் சுஜித் செயல்பட்டுள்ளார். இதனால் அமெரிக்க பெண்ணுக்கு அவர் களறி பயிற்சி அளித்திருக்கிறார். இதனை பயன்படுத்தி அமெரிக்க பெண்ணை சுஜித் பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் பலமுறை அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட அமெரிக்க பெண், கண்ணூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், களரி ஆசிரியர் சுஜித்தை கைது செய்தனர். இவர் இதுபோன்று பயிற்சிக்கு வந்த வேறு பெண்களிடமும் தவறாக நடந்திருக்கலாம் என்று போலீசார் கருதினர். அது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

பின்பு சுஜித்தை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தற்காப்பு கலை பயிற்சிக்கு வந்த அமெரிக்க பெண்ணை பயிற்சி மையத்தின் உரிமையாளர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com