

கடந்த ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா 171 விமானத்தில் அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கிச் சென்ற 242 பயணிகளில் 241 பேர் உயிரிழந்தனர்.
இந்த விமானம் பைரம்ஜி ஜூஜூபாய் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தின் மீது கீழே விழுந்தபோது 19 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் சிக்கி உயிரிழந்தார். விமான தளத்திலிருந்து ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட 30 வினாடிகளில் இந்த விபத்து நிகழ்ந்தது.
விமானி அறையில் பதிவான ஆடியோவில், ஒரு விமானி மற்றொருவரிடம் ஏன் எரிபொருளை நிறுத்தினீர்கள் என்று கேட்க, அதற்கு அவர் அதைத் தொடவே இல்லை என்று பதிலளிக்கும் குழப்பமான ஆடியோ வெளியாகி சர்ச்சையானது.
இதையடுத்து விசாரணை முடிவுகள் தெரியவருவதற்கு முன்பே, அனைத்து சட்டப்பூர்வ உரிமைகளையும் முன்கூட்டியே கைவிடுவதை உள்ளடக்கிய தீர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுமாறு, விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை ஏர் இந்தியா கட்டாயப்படுத்துவதாக குஜராத் முன்னாள் முதல்வரரின் மகள் ராதிகா ரூபானி குற்றம்சாட்டினார்.
மேலும், 100 மில்லியன் பவுண்டுகளுக்கும் குறைவான இழப்பீட்டை வழங்கக்கூடிய ஆவணங்களில் கையெழுத்திடுமாறு குடும்பங்களைக் கட்டாயப்படுத்தி வருவதாகவும் ஸ்டீவர்ட்ஸ் லா நிறுவனம் குற்றம் சாட்டியது.
இந்நிலையில் தற்போது ஏர் இந்தியா வெளியிட்டுள்ள பதிவில், “எங்கள் சலுகையை ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என எந்தவொரு குடும்பத்திற்கும் அல்லது தனிநபருக்கும் எந்தவிதமான காலக்கெடுவோ அல்லது அழுத்தமோ கொடுக்கவில்லை.
விபத்தைத் தொடர்ந்து, ஏர் இந்தியா உடனடியாக இடைக்கால அடிப்படையில் இழப்பீட்டை வழங்கத் தொடங்கியது.
இறுதி இழப்பீட்டை மதிப்பிடும் நீண்ட செயல்முறை தொடங்கும் வேளையில், குடும்பங்களின் உடனடி நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதே இதன் நோக்கமாக இருந்தது.
டாடா குழுமத்தால் நிறுவப்பட்ட ஏஐ-171 நினைவு மற்றும் நலவாழ்வு அறக்கட்டளை, விபத்தில் உறவினர்களை இழந்த ஏறக்குறைய அனைத்துக் குடும்பங்களுக்கும் கருணை அடிப்படையில் ரூ. 1 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது.
தகவல் அறியும் உரிமை ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு முன்பு விசாரணை முடிவுகளுக்காகக் காத்திருக்கும் உரிமை குடும்பங்களுக்கு உள்ளது.
அதே நேரத்தில் இழப்பீடு பெற விரும்புவோர் அவ்வாறு செய்ய சுதந்திரம் உண்டு” என்றும் கூறியது.