நாட்டை விட்டு வெளியேற தடை... மும்பை விமான நிலையத்தில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் தடுத்து நிறுத்தம்

குற்றப்பத்திரிகையில் நடிகை ஜாக்குலின் பெயர் சேர்க்கப்பட்டதையடுத்து அவர், நாட்டை விட்டு வெளியேறாமல் தடுக்கும் வகையில், அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் வெளியிடப்பட்டது.
ஜாக்குலின் பெர்னாண்டஸ்
ஜாக்குலின் பெர்னாண்டஸ்
Published on

மும்பை:

அதிமுகவின் இரட்டை இலை சின்னம் தொடர்பான லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகர், சிறையில் இருந்தவாறே தொழிலதிபர் மனைவியை ஏமாற்றி, 200 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, டெல்லி பொருளாதார குற்றவியல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதன் அடிப்படையில் சுகேஷ் சந்திரசேகர் மற்றும் இந்த மோசடியில் தொடர்புடைய அவரது காதலிகள் மீது அமலாக்கத்துறை பணமோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது.

இந்த வழக்கில் சுகேஷ் மற்றும் அவரது காதலியும் நடிகையுமான ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத்துறை சார்பில் 7000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், சுகேஷ் தனது காதலி ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு கொடுத்த ரூ.10 கோடி மதிப்புள்ள பரிசுகளில் ரூ.52 லட்சம் மதிப்புள்ள குதிரையும் ரூ.9 லட்சம் மதிப்புள்ள பாரசீக பூனையும் அடங்கும் என்று அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளது. 

குற்றப்பத்திரிகையில் பெயர் சேர்க்கப்பட்டதையடுத்து ஜாக்குலின் நாட்டை விட்டு வெளியேறாமல் தடுக்கும் வகையில், அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் வெளியிட்டது.

இந்நிலையில், நடிகை ஜாக்குலின் துபாய் செல்வதற்காக இன்று மும்பை விமான நிலையத்திற்கு வந்தார். துபாயில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக புறப்பட்டார். ஆனால், லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருப்பதால், அவரை மும்பை விமான நிலையத்தில் உள்ள குடியேற்ற அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். 

சிறிது நேர விசாரணைக்குப் பிறகு அவர் விடுவிக்கப்பட்டார். மேலும் அவர் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை டெல்லி அலுவலகத்தில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை புதிய சம்மன் அனுப்பவுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com