ஆந்திராவில் ரூ.30 லட்சத்துக்கு தக்காளி விற்ற வியாபாரி கொலை

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராஜசேகர் ரெட்டி பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.ராஜசேகர் ரெட்டிக்கு தெரிந்த நபர்கள் தான் அவரை கொலை செய்திருக்க வேண்டும் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.
ஆந்திராவில் ரூ.30 லட்சத்துக்கு தக்காளி விற்ற வியாபாரி கொலை
Published on

திருப்பதி:

ஆந்திர மாநிலம், மதனப்பள்ளி அருகே உள்ள போடிமல்லதின்னா கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர் ரெட்டி. இவர் தன்னுடைய விவசாய நிலத்தில் தக்காளி பயிரிட்டு சந்தையில் விற்பனை செய்து வந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டு அவதி அடைந்து வந்தார்.

இந்நிலையில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் கடந்த 20 நாட்களில் ராஜசேகர் ரெட்டிக்கு ரூ.30 லட்சம் வருவாய் கிடைத்தது. இதனால் ராஜசேகர் ரெட்டி திடீரென லட்சாதிபதியானார்.

நேற்று ராஜசேகர் ரெட்டி தக்காளி வியாபாரத்தை முடித்துக் கொண்டு வசூலான பணத்துடன் தனது பைக்கில் வந்தார். அவரை மர்மநபர்கள் வழி மறித்தனர்.

அவரை கை, கால்களை கட்டி மறைவான இடத்திற்கு கடத்தி சென்றனர். அங்கு ராஜசேகர ரெட்டியிடம் பணத்தைக் கேட்டு அடித்து துன்புறுத்தினர்.

அவர் பணத்தைக் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள் ராஜசேகர் ரெட்டியை அடித்து கொலை செய்தனர்.

பின்னர் பிணத்தை வீசிவிட்டு சென்றனர். அந்த வழியாக சென்றவர்கள் ராஜசேகர் ரெட்டி கொலை செய்யப்பட்டு கிடப்பதைக் கண்டு மதனப்பள்ளி போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராஜசேகர் ரெட்டி பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

ராஜசேகர ரெட்டியிடம் உள்ள ரூ.30 லட்சத்தை பறிக்க அவரை கடத்திச் சென்று துன்புறுத்தியதாகவும் பணம் தர மறுத்ததால் அவரை கொலை செய்து வீசியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

ராஜசேகர் ரெட்டிக்கு தெரிந்த நபர்கள் தான் அவரை கொலை செய்திருக்க வேண்டும் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com