புதைகுழியில் சிக்கி 2 நாட்களாக உயிருக்கு போராடிய வாலிபர்

வனப்பகுதியில் ரெயில்வே தண்டவாளம் அருகே அபாயகரமான புதைக்குழி உள்ளது.வனத்துறையினர் எச்சரிக்கை பலகை அமைத்துள்ளனர்.
புதைகுழியில் சிக்கி 2 நாட்களாக உயிருக்கு போராடிய வாலிபர்
Published on

திருப்பதி:

தெலுங்கானா மாநிலம், மெகபூப் நகர் மாவட்டம், மத்தே வாடா அடர்ந்த வனப்பகுதியில் ரெயில்வே தண்டவாளம் அருகே அபாயகரமான புதைக்குழி உள்ளது. மெல்ல திறந்தது கதவு சினிமாவில் வருவதுபோல இந்த புதைகுழி உள்ளது.

புதைகுழிக்குள் சிக்கி யாரும் பலியாக கூடாது என்பதற்காக புதை குழியை சுற்றிலும் இரும்பு கம்பிகள் கொண்டு தடுப்பு அமைத்து இருந்தனர். மேலும் எச்சரிக்கை பலகை அமைத்துள்ளனர்.

இந்த நிலையில் வாரங்கல் மாவட்டம், அல்லோடுவை சேர்ந்த நரேஷ் (வயது 30). இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மத்தே வாடா வனப்பகுதிக்கு வந்தார். புதைக்குழியை சுற்றி அமைக்கப்பட்டுள்ள இரும்பு தடுப்புகளை தாண்டி சென்றார். அப்போது நரேஷ் புதைக்குழிக்குள் விழுந்தார்.

மார்பு வரை அவரது உடல் புதைந்த அதிர்ஷ்டவசமாக முழுவதும் மூழ்கவில்லை.

புதைக்குழி உள்ளதால் அந்த பகுதிக்கு யாரும் செல்வது இல்லை. புதை குழிக்குள் சிக்கிய நரேஷ் 2 நாட்களாக உயிருக்கு போராடியபடி கூச்சலிட்டு கொண்டே இருந்தார்.

ரெயில்வே தண்டவாளம் அருகே ரெயில் டிராலி டிரைவர் ஒருவர் வந்தார். அப்போது வனப்பகுதியில் இருந்து வாலிபர் கூச்சலிடுவதை கேட்டார். அவர் சென்று பார்த்தபோது வாலிபர் புதைக்குழிக்குள் சிக்கிக் கொண்டது தெரிய வந்தது.

இதுகுறித்து மத்தே வாடா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு செல்ல முடியாததால் கயிறு கட்டி புதைக்குழி இருக்கும் இடத்திற்கு சென்றனர். பின்னர் கயிறு மூலம் புதைக் குழியில் இருந்து நரேஷை மீட்டனர்.

மீட்கப்பட்ட நரேஷ் மயக்க நிலையில் இருந்ததால் அவரை மத்தே வாடா அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். வாரங்கலை சேர்ந்த வாலிபர் எதற்காக மத்தே வாடா வந்தார். தற்கொலை செய்து கொள்ள புதைக்குழியில் இறங்கினாரா என நரேஷுக்கு மயக்கம் தெளிந்த பிறகு தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com