என் மலர்
இந்தியா

ஜப்பான் தூதரக பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை.. டெல்லி JNU பல்கலைக்கழக மூத்த பேராசிரியர் பணிநீக்கம்
- அப்பெண் ஜப்பான் திரும்பியதும் இதுகுறித்து முறையாக புகார் அளித்துள்ளார்.
- ஜப்பான் தூதரகத்தின் மூலம் வெளியுறவு அமைச்சகம் மற்றும் ஜேஎன்யு பல்கலைக்கழகத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.
ஜப்பான் தூதரக பெண் அதிகாரிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த குற்றச்சாட்டின் பேரில் டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) மூத்த பேராசிரியர் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
சில மாதங்களுக்கு முன் ஜப்பான் தூதரக பெண் அதிகாரி பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு தொடர்பாக ஜேஎன்யு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வுகள் (International Studies) துறையில் பணியாற்றி வந்த மூத்த பேராசிரியர் ஸ்வரன் சிங்கை அணுகியபோது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளக்காட்டார்.
அப்பெண் ஜப்பான் திரும்பியதும் இதுகுறித்து முறையாக புகார் அளித்துள்ளார். இந்த புகார் ஜப்பான் தூதரகத்தின் மூலம் வெளியுறவு அமைச்சகம் மற்றும் ஜேஎன்யு பல்கலைக்கழகத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. பேராசிரியர் ஸ்வரன் சிங் மீது ஏற்கனவே இதுபோன்ற பல புகார்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த புதன்கிழமை நடந்த ஜேஎன்யு நிர்வாகக் குழுக் கூட்டத்தில் பல்கலைக்கழகத்தின் உள் புகார்கள் குழு (ஐசிசி) நடத்திய விசாரணையின் முடிவுகள் சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பேராசிரியர் ஸ்வரன் சிங் பணி ஓய்வுக்கு ஒரு வருடம் முன்னதாகவே பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என பல்கலைக்கழகத்தின் சார்பில் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.






