ராஜஸ்தான்: பள்ளி மாணவனுக்கு கத்திக்குத்து.. வெடித்தது கலவரம்..144 தடை அமல்- இணைய சேவைகள் முடக்கம்

அரசு பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வரும் 15 வயது மாணவனை சக மாணவன் கத்தியால் குத்தினான்இரு தரப்புக்கு இடையில் வெடித்துள்ள மோதல் மதக் கலவரமாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ராஜஸ்தான்: பள்ளி மாணவனுக்கு கத்திக்குத்து.. வெடித்தது கலவரம்..144 தடை அமல்- இணைய சேவைகள் முடக்கம்
Published on

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள அரசு பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வரும் 15 வயது மாணவனை சக மாணவன் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளியில் உணவு இடைவேளையின்போது இரு மாணவர்களும் சண்டையிட்டுக் கொண்டதாகவும், அப்போது ஒரு மாணவன் மற்றொரு மாணவனின் தொடையில் கத்தியால் குத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த மாணவனைப் பள்ளி நிர்வாகத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனிடையே பாதிக்கப்பட்ட மாணவனின் உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தின் முன்பு திரண்டனர். கத்தியால் குத்திய மாணவனையும், அவனது தந்தையையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கத்தியால் குத்திய மாணவன் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அங்கு இரு தரப்பினருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டுள்ளது. பள்ளி அமைந்துள்ள மதுபன் பகுதியில் உள்ளவாகனங்களை போராட்டக்காரர்கள் தீவைத்து எரித்தனர். அவர்கள் ஒருவர் மீது ஒருவர் கல் வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தி வருகின்றனர்.

தாக்கப்பட்ட சிறுவன் ஐசியுவில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில் உதய்ப்பூர் பகுதியில் இந்து அமைப்பினர் மற்றும் இஸ்லாமிய தரப்புக்கு இடையில் வெடித்துள்ள மோதல் மதக் கலவரமாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே உதய்பூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வதந்திகள் பரவாமல் இருக்க இணையசேவை துண்டிக்கப்பட்டுள்ளது. கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவர அப்பகுதியில் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com