என் மலர்
இந்தியா

10 ஆண்டுகளில் 8 பேர் உயிரிழப்பு- பொதுமக்களை அச்சுறுத்தும் புலியை சுட்டுப் பிடிக்க வனத்துறை உத்தரவு
- காபி தோட்டம் பணிக்கு சென்ற ராதா என்ற பெண் புலி தாக்கி பரிதாபமாக இறந்தார்.
- மக்களை அச்சுறுத்தும் புலியை பிடிக்க வனத்துறை தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் உள்ள சிறந்த சுற்றுலா தலமான வயநாடு கடந்த சில ஆண்டுகளாக அச்சம் தரும் பகுதியாக மாறி உள்ளது. இங்குள்ள வன பகுதியை ஓட்டியுள்ள கிராமங்களில் வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்திருப்பது தான் மக்களின் அச்சத்திற்கு காரணமாக உள்ளது.
வயநாட்டில் புலிகள் நடமாட்டம் அதிகம் என்றாலும் முன்பு அவை வனப்பகுதிக்குள் தான் இருந்தன. ஆனால் சமீப காலங்களில் இவை அடிக்கடி குடியிருப்பு மற்றும் அதனை ஓட்டியுள்ள பகுதிகளுக்கு வந்து மக்களை தாக்கி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் இதுவரை 8 பேர் புலி தாக்கி இறந்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
நேற்று காபி தோட்டம் பணிக்கு சென்ற ராதா என்ற பெண் புலி தாக்கி பரிதாபமாக இறந்தார். வயநாடு மாவட்டம் மானந்த வாடி அருகே உள்ள பஞ்சரக்கொல்லி பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்தப் பகுதியில் யாரும் இதுவரை புலியை பார்த்தது இல்லை என்ற நிலையில் தான் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதிலும் ராதாவை தாக்கிய புலி, அவரது உடலை சிறிது தூரம் இழுத்துச் சென்று கடித்து குதறிய பிறகு தான் விட்டுச் சென்றுள்ளது. அவரது உடலை பார்த்த பிறகு தான் புலியின் தாக்குதல் பற்றி தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் வயநாடு முழுவதும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
பலியான ராதா வனக்காவலரின் மனைவி ஆவார். மேலும் இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை மின்னுமணியின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. புலி தாக்கி பெண் இறந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடம் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் வனத்துறையை கண்டித்து போராட்டத்திலும் இறங்கினர்.
இதனை தொடர்ந்து மக்களை அச்சுறுத்தும் புலியை பிடிக்க வனத்துறை தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளது. முதல் கட்டமாக புலியை பிடித்து மக்கள் நடமாட்டம் இல்லாத காட்டுப் பகுதியில் கொண்டு விட முடிவு செய்து அதற்கான முயற்சியில் வனத்துறை இறங்கி உள்ளது. இதற்காக 28 நிலையான கேமராக்கள், 4 நேரடி கேமராக்கள் வனப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.
தலைமை வன கால்நடை மருத்துவர் அருண் ஜக்காரியா மற்றும் வடக்கு வட்டத்தின் முதன்மை வன பாதுகாவலர் தீபா ஆகியோர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் புலி பாதுகாப்பு உடைகள் அணிந்து ஆயுதத்துடன் வனப்பகுதியில் ரோந்து சுற்றி வருகின்றனர்.
2 டிரோன்கள் பயன்படுத்தியும் புலி இருப்பிடத்தை வனத்துறையினர் தேடி வருகின்றனர். இதற்கிடையில் புலியை சுட்டுப் பிடிக்கவும் தலைமை வன உயிரின காப்பாளர் பிரமோத் கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். மத்திய அரசின் ஸ்டாண்டர்ட் ஆப்ப ரேட்டிங் நடைமுறைப்படி அமைக்கப்பட்ட சிறப்புக்குழு கூடி நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்ததையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூண்டுகள் அல்லது அமைதிப்படுத்தும் கருவிகளை கொண்டு புலியை பிடிக்க முடியாத பட்சத்தில் அதனை சுட்டுக் கொல்லலாம் என்று வன உயிரின காப்பாளர் தனது உத்தரவில் குறிப்பிட்டு உள்ளார். இதனை தொடர்ந்து இரவு முழுவதும் சிறப்பு குழுவினர் ஆயுதங்களுடன் வனப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று 2-வது நாளாக அவர்கள் புலியை தேடி வருகின்றனர்.