search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கு திருப்பதி கோவிலில் 7 லட்சம் டிக்கெட் ஆன்லைனில் வெளியீடு
    X

    வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கு திருப்பதி கோவிலில் 7 லட்சம் டிக்கெட் ஆன்லைனில் வெளியீடு

    • 5 லட்சம் பேர் கட்டணமின்றி முன்பதிவு செய்யலாம்.
    • 29-ந் தேதி சந்திர கிரகணத்தை முன்னிட்டு 28-ந் தேதி இரவு 7-05 மணிக்கு நடை சாத்தப்படும்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவில் தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் தர்மா ரெட்டி கூறியதாவது:-

    ஏழுமலையான் கோவிலில் வரும் டிசம்பர் மாதம் 23-ந் தேதி முதல் ஜனவரி 1-ந் தேதி வரை வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்பட உள்ளது.

    பக்தர்களின் கோரிக்கையை ஏற்று வைகுண்ட ஏகாதசியையொட்டி ரூ 300 ஆன்லைன் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் 2 லட்சமும், 5 லட்சம் இலவச தரிசன டிக்கெட்டுகள் என மொத்தம் 7 லட்சம் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதில் 5 லட்சம் பேர் கட்டணமின்றி முன்பதிவு செய்யலாம்.

    மலையில் உள்ள ஓட்டல்களில் பக்தர்களுக்கு அதிக விலையில் உணவு வழங்கப்படுவதாக பல்வேறு புகார்கள் வருகின்றன.

    பக்தர்களுக்கு குறைந்த விலையில் உணவு வழங்க அன்னமைய்யா மாளிகை மற்றும் நாராயணகிரி பகுதியில் ஓட்டல்கள் அமைக்க சுற்றுலாத் துறைக்கு கட்டிடங்கள் வாடகைக்கு விடப்படும்.

    வரும் 15-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை பிரம்மோற்சவ விழாவை பிரமாண்ட முறையில் நடத்த விரிவான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

    கருட சேவை நடைபெறும் 19-ந் தேதி மலை பாதையில் பைக்குகள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. 17-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை திருமலையில் பக்தர்களுக்கு அறை வாடகை விடுவது நிறுத்தப்படும். வரும் 29-ந் தேதி சந்திர கிரகணத்தை முன்னிட்டு 28-ந் தேதி இரவு 7-05 மணிக்கு நடை சாத்தப்படும்.

    மறுநாள் அதிகாலை 3 .15 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஏழுமலையான் கோவிலில் 3-வது சனிக்கிழமையை யொட்டி நேற்று முதலே ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது.

    இன்று காலை 3 கிலோமீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்தனர். 30 மணி நேரத்திற்கு பிறகு தரிசனம் செய்து வருகின்றனர்.

    திருப்பதியில் நேற்று 72, 104 பேர் தரிசனம் செய்தனர். 25,044 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.80 கோடி உண்டியல் காணிக்கை வசூல் ஆனது.

    கடந்த மாதம் ஏழுமலையான் கோவிலில் 1 கோடி லட்டுகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. ரூ 110 கோடி உண்டியலில் காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.

    Next Story
    ×