என் மலர்tooltip icon

    இந்தியா

    விளையாட்டு விபரீதமானது...  8-ம் வகுப்பு மாணவனை கொலை செய்த 6-ம் வகுப்பு மாணவன்
    X

    விளையாட்டு விபரீதமானது... 8-ம் வகுப்பு மாணவனை கொலை செய்த 6-ம் வகுப்பு மாணவன்

    • சிறுவர்கள் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
    • படுகாயமடைந்த சேத்தன், கே.எம்.சி-ஆர்.ஐ மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தான்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் தார்வாட் மாவட்டம் ஹுப்பள்ளி மொருசவீரா மடத்திற்கு அருகிலுள்ள காமரிபேட்டை குருசித்தேஷ்வர் நகரில் வசித்து வந்த மாணவன் சேத்தன் ரக்காசகி (வயது 15).

    இவன் அங்குள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்று 9-ம் வகுப்பு செல்ல இருந்தான்.

    சம்பவத்தன்று மாலையில் வீட்டின் தேனீர் அருந்திவிட்டு தனது தாயிடம் புதிய ஆடைகளை எடுத்து வைக்க சொல்லி விட்டு தெருவில் விளையாட சென்றான்.

    இம்மாணவனும், எதிர்வீட்டில் வசிக்கின்ற 6-ம் வகுப்பு மாணவனும் நண்பர்கள் ஆவார்கள்.

    2 பேரும் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது செல்போனில் ஆன்லைன் வன்முறை வீடியோ விளையாட்டில் வருவதுபோது கட்டி புரண்டு சண்டை போட்டனர். இதில் ஆத்தரம் அடைந்த 6-ம் வகுப்பு மாணவன் வீட்டிற்கு ஓடிச் சென்று ஒரு கத்தியை எடுத்துக் கொண்டு வந்து 9-ம் வகுப்பு மாணவன் சேத்தன் ரக்காசகியின் வயிற்றில் குத்தி விட்டு வீட்டுக்கு சென்று பதுங்கி கொண்டான்.

    படுகாயமடைந்த சேத்தன், கே.எம்.சி-ஆர்.ஐ மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தான்.

    இந்த சம்பவம் குறித்து காமரிபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 6-ம் வகுப்பு மாணவனை போலீஸ் நிலையத்துக்கு போலீஸ் வாகனத்தில் அழைத்து செல்ல முற்படும்போது அவர்களுடன் செல்ல மறுத்து சிறுவன் அடம் பிடித்தான்.

    அம்மா போலீஸ் கூப்பிட்டு போறாங்க, நான் போக மாட்டேன் என குழந்தை போல் அடம்பிடித்தான்.

    தான் செய்த விபரீத காரியத்தால் தன்னுடன் விளையாடிய நண்பனின் உயிர் போய் விட்டது என்று கூட அந்த சிறுவனுக்கு தெரியவில்லை.

    அந்த சிறுவனை சமாதானப்படுத்தி வாகனத்தில் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

    கே.எம்.சி.ஆர்.ஐ மருத்துவமனையில் போலீஸ் கமிஷனர் சசிகுமார் விரைந்து சென்று கொலை செய்யப்பட்ட சிறுவனின் உடலை பார்வையிட்டார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், 2 சிறுவர்களும் எதிர் எதிர் வீடுகளை சேர்ந்தவர்கள். ஒன்றாக விளையாடிக் கொண்டிருந்தனர். ஒரு சாதாரண விசயத்திற்காக கொலையில் முடிந்துள்ளது. சட்ட நடைமுறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும். பெற்றோர்கள் இதுகுறித்து கவனமாக இருக்க வேண்டும். கொலையுண்ட சிறுவன் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தான். ஒரே மகன். பெற்றோர் ரொட்டி விற்று பிழைப்பு நடத்துகிறார்கள். இது ஒரு மனதை உடைக்கும் சம்பவம். கொல்லப்பட்ட சிறுவனின் குடும்பம் ஏழ்மையானது.

    பள்ளியில் படிக்கின்ற சிறுவர்களை ஆக்சன் சினிமா , செல்போனில் ஆக்சன் கேம் வீடியோ விளையாட அனுமதிக்காதீர்கள். அது சிறுவர்களின் மனநிலையை வன்முறைமிக்கவர்களாக மாற்றிவிடும் என்றார்.

    பப்ஜியை தடை செய்தது போல ப்ரீ பயர் செல்போன் விளையாட்டில் மூழ்கி கிடக்கும் சிறுவர் சமுதாயத்தை மீட்டெடுக்க இதுபோன்ற வன்முறை விளையாட்டுக்களை நிரந்தரமாக தடை செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம்.

    Next Story
    ×