அரியானா வன்முறைக்கு 5 பேர் பலி - ஊரடங்கு அமல்

அரியானாவில் வன்முறையில் பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது.நூ மாவட்டத்தில் நேற்று ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
அரியானா வன்முறைக்கு 5 பேர் பலி - ஊரடங்கு அமல்
Published on

சண்டிகர்:

அரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் விஸ்வ இந்து பரிஷத்தின் ஊர்வலத்தில் சிலர் கல் வீசித் தாக்கினர். அதைத்தொடர்ந்து இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது.

வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டதுடன், கும்பல் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் 2 ஊர்க்காவல் படை வீரர்கள் குண்டு பாய்ந்து உயிரிழந்தனர். நூ மாவட்டத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவி வந்ததால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இணைய சேவை முடக்கப்பட்டது.

இந்நிலையில், நூ மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடந்த வன்முறையில் காயமடைந்த மேலும் 2 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 5 ஆக அதிகரித்தது.

நூ மாவட்டத்தில் 50 போலீஸ் வாகனங்கள் உள்பட 120 வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன, தீவைக்கப்பட்டன. 10 போலீசார் உள்பட 23 பேர் காயமடைந்தனர். வன்முறை தொடர்பாக 27 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். பதற்றம் நிறைந்த பகுதிகளில் ஏராளமான போலீசாரும், துணை ராணுவ படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். நூ மாவட்டத்தில் போலீசார் கொடி அணிவகுப்பும் நடத்தினர்.

மேலும், முதல் மந்திரி மனோகர் லால் கட்டார் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், அனைத்து தரப்பினரும் அமைதி காக்க வேண்டும். வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பதிவிட்டுள்ளார்

X

Maalai Malar
www.maalaimalar.com