கொல்கத்தா கட்டிடம் இடிந்து விழுந்த விபத்து - 5 பேர் உயிரிழப்பு

உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
கொல்கத்தா கட்டிடம் இடிந்து விழுந்த விபத்து - 5 பேர் உயிரிழப்பு
Published on

கொல்கத்தாவின் தாரதலா பகுதியில் கட்டுமானத்தில் இருந்த மூன்று மாடி கிடங்கு ஒன்று இடிந்து விழுந்ததில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர், சுமார் 20 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, நகர மாநகராட்சி எல்லைக்குள் முந்தைய திரிணாமுல் காங்கிரஸ் (TMC) ஆட்சிக்காலத்தில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்டுமான திட்டங்களையும் ஜூலை 31 வரை நிறுத்திவைக்க முதல்வர் உத்தரவிட்டார்.

விபத்து நடந்து 9 மணி நேரத்திற்கும் மேலாகியும், கான்கிரீட் மற்றும் எஃகு இடிபாடுகளுக்கு அடியில் இன்னும் சுமார் 15 தொழிலாளர்கள் சிக்கியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

3 பேர் கைது:

இடிந்து விழுந்த கிடங்கு, சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகத்தின் கீழ் குத்தகைக்கு விடப்பட்ட ஒரு தனியார் சொத்து என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கட்டுமான தள மேற்பார்வையாளர் மற்றும் தொழிலாளர்களை ஏற்பாடு செய்து தரும் இருவர் என மொத்தம் மூன்று பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

குத்தகைதாரர், கட்டுமான நிறுவன உரிமையாளர்கள் மற்றும் கொல்கத்தா மாநகராட்சியின் (KMC) திட்ட அனுமதி வழங்கும் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் விசாரணை வளையத்தில் இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட முதல்வர், அந்தக் கிடங்கின் "குறைபாடுள்ள" கட்டுமான திட்டங்களுக்கு இந்த ஆண்டு ஜனவரி 17-ஆம் தேதியன்று, அதாவது திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மாநகராட்சியால் அனுமதி வழங்கப்பட்டதாக கூறினார்.

முதல்வர் கருத்து:

"நான் நேரில் பார்த்ததில் இருந்து எனக்கு ஒரு விஷயம் தெளிவாகிறது: மழை அல்லது கட்டுமான பணி நடைபெற்ற இடத்தின் மென்மையான மண் தன்மை காரணமாக இந்த விபத்து நிகழவில்லை. இது ஒரு குறைபாடுள்ள கட்டமைப்பு வடிவமைப்பால் ஏற்பட்டது. இதில் இரும்பு தூண்களால் கான்கிரீட்டின் எடையை தாங்க முடியவில்லை, அதனால் அவை சரிந்து விழுந்துவிட்டன.

முந்தைய அரசால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்டுமான திட்டங்களின் பணிகளையும் - குறிப்பாக வணிக கட்டிடங்கள் மற்றும் நீர்நிலைகளை நிரப்பி அனுமதி பெறப்பட்ட திட்டங்கள் உட்பட நிறுத்திவைக்குமாறு கொல்கத்தா மாநகராட்சி ஆணையர் மற்றும் நகர்ப்புற மேம்பாடு மற்றும் நகராட்சி விவகாரங்கள் துறைக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். அவை தணிக்கைக்கு உட்படுத்தப்படும். அத்தகைய இடங்களில் கட்டுமான பணிகள் ஜூலை 31 வரை நிறுத்திவைக்கப்படும்," என்று முதல்வர் சுவேந்து அதிகாரி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com