30 வருடங்கள், 15 நீதிபதிகளை சந்தித்த அடிதடி வழக்கு: வெறும் 2 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் முடிந்தது

30 வருடத்திற்கு முன் மூன்று பேர் 40 வயது நபரை தாக்கியுள்ளனர்.தற்போது மூன்று பேரில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
30 வருடங்கள், 15 நீதிபதிகளை சந்தித்த அடிதடி வழக்கு: வெறும் 2 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் முடிந்தது
Published on

உத்தர பிரதேச மாநிலம் பாண்டா மாவட்டத்தில் ஒரு அடிதடி வழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் 30 வருடங்களை சந்தித்து, 15 நீதிபதிகள் கைகளை கடந்த தற்போது முடிவுக்கு வந்துள்ளது. குற்றவாளிகளுக்கு தலா வெறும் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதுடன் வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.

1994-ம் ஆண்டு கமாசின் காவல் விலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ராம்ரூப் ஷர்மா என்பவரை மூன்று பேர் அடித்து துன்புறுத்தியுள்ளனர். குடிப்பழக்கம் கொண்ட அவர்கள், குடிப்பதற்கு பணம் கேட்டு தாக்கியுள்ளனர். இதனால் ராம்ரூப் ஷர்மா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் நான்கு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தொடக்க விசாரணைக்குப்பின் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். சாட்சிகள் ஆஜராக நிலையில் வழக்கு அப்படியே நிலுவையில் இருந்துள்ளது. இறுதியாக சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்ட பின் விசாரணை தொடர்ந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.

இதில் என்ன ஆச்சர்யம் என்றால் 30 வருடத்தில் 15 நீதிபதிகள் மாறியுள்ளனர். 100-க்கும் மேற்பட்ட முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. இருவர் சம்பவம் நடைபெற்றபோது வாலிபர்களாக இருந்தவர்கள். தற்போது 50 வயதை தாண்டியுள்ளது. ஒருவர் விசாரணையின்போது உயிரிழந்துள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான நபருக்கு அப்போது 40 வயதாகும். தற்போது 70 வயதை தாண்டியுள்ளது. தன்னை தாக்கியவர்கள் ஏராளமான வழக்கில் தண்டனை பெற்றவர்கள். அவர்கள் தொழில்முறை குற்றவாளிகள். இந்த சிறிய தண்டனை அவர்களை எந்த விதத்திலும் பாதிக்காது என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com