search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தீபாவளியை முன்னிட்டு அயோத்தி ராமர் கோவிலில் 24 லட்சம் தீபம் ஏற்றப்படுகிறது: 51 இடங்களில் சிறப்பு ஏற்பாடு
    X

    தீபாவளியை முன்னிட்டு அயோத்தி ராமர் கோவிலில் 24 லட்சம் தீபம் ஏற்றப்படுகிறது: 51 இடங்களில் சிறப்பு ஏற்பாடு

    • கடந்த 2017 ம் ஆண்டு இந்த தீப உற்சவ விழாவை உத்தரப்பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார்.
    • இன்று காலை முதலே இதற்கான பணிகள் மும்முரமாக தொடங்கி நடந்து வருகிறது.

    லக்னோ:

    உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இதன் திருப்பணிகள் முடிவுற்ற நிலையில் வரும் ஜனவரி மாதம் கோவில் கும்பாபிஷேகம் செய்யப்ப ட்டு பக்தர்கள் வழிபாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அயோத்தி ராமர் கோவிலை பக்தர்கள் வழிபாட்டுக்கு திறந்து வைக்கிறார். இங்கு ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை முன்னிட்டு தீப உற்சவம் எனப்படும் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கடந்த 2017 ம் ஆண்டு இந்த தீப உற்சவ விழாவை உத்தரப்பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார்.

    அந்த உற்சவத்தின் போது, ராமர் கோவிலில் லட்சக்கணக்கான தீபங்கள் ஏற்றப்படும். அந்த வகையில் 2017 ம் ஆண்டு 1.71 லட்சம் தீபங்களும், 2018 ம் ஆண்டு 3.01 லட்சம் தீபங்களும், 2019 ஆண்டு 4.04 லட்சம் தீபங்களும், 2020ல் 6.06 லட்சம் தீபங்களும், 2021ல் 9.41 லட்சம் தீபங்களும், கடந்தாண்டு 15.76 லட்சம் தீபங்களும் ஏற்றப்பட்டது.

    இந்த ஆண்டு ராமர் கோவில் பிரம்மாண்டமாக கட்டி முடிக்கப்பட்டுள்ளதால் உலக சாதனை நிகழ்ச்சி போல 24 லட்சம் தீபங்கள் ஏற்றப்பட உள்ளது. இது ராமர் கோவில் சுற்று பகுதியில் 51 இடங்களில் ஏற்றப்படுகிறது. இந்த பிரம்மாண்ட தீபம் ஏற்றும் நிகழ்ச்சி இன்று இரவு நடைபெறுகிறது.

    இந்தப் பணிக்காக 25 ஆயிரம் தன்னார்வலர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அங்கு திரண்டு உள்ளார்கள்.

    இதில் 21 லட்சம் தீபங்கள் ஏற்றுவதே இலக்காக வைக்கப்பட்டுள்ளது. எனவே 24 லட்சம் தீபங்கள் ஏற்றி அதில் சுமார் 3 லட்சம் தீபங்கள் ஆங்காங்கே அணைந்தாலும் 21 லட்சம் தீபங்கள் ஒரே நேரத்தில் பிரகாசமாக ஜொலிக்க செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தீப உற்சவத்தில் முந்தைய சாதனைகளை முறியடிக்க உத்திர பிரதேச அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிகழ்ச்சிக்கு ஒரு லட்சம் லிட்டர் எண்ணெய் மற்றும் திரிகள் பயன்படுத்தப்படஉள்ளது. இதனை லோகியா அவத் பல்கலைக்கழகத்தினர் முன்னின்று கவனித்து வருகின்றனர். இந்த தீப உற்சவத்திற்காக ரூ.3கோடி செலவிடப்படுகிறது.

    இதில் பங்கேற்கும் தன்னார்வலர்களுக்கு பிரத்யேக சீருடை வழங்கப்பட்டுள்ளது. இன்று காலை முதலே இதற்கான பணிகள் மும்முரமாக தொடங்கி நடந்து வருகிறது.

    Next Story
    ×