என் மலர்
இந்தியா

பஞ்சாபில் கள்ளச்சாராயம் குடித்து 21 பேர் உயிரிழப்பு - 10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
- 10 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- இச்சம்பவம் தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள 5 கிராமங்களில் கள்ளச்சாராயம் குடித்து 21 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் குறித்து வீடு வீடாகச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து பேசிய பஞ்சாப் முதலமைச்சர் பகவத் மான், " கள்ளச்சாராயம் அருந்தி பலர் உயிரிழந்தது சோகமான நிகழ்வாகும். அப்பாவி மக்களைக் கொன்ற இந்த கொலையாளிகள் எக்காரணம் கொண்டும் தப்பவிடப்பட மாட்டார்கள்" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று முதலமைச்சர் பகவத் மான் அறிவித்தார்.
2020 ஆம் ஆண்டில் பஞ்சாப் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து மொத்தம் 120 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. .






