உலகின் முதல் நடராஜர் சிலை...

மன்னன் கண்களுக்கு பொன்னாகத் தெரிந்த சிலை மற்றவர்களுக்குச் செம்பாகத் தெரிய, வருத்தமடைந்த மன்னன் கனவில் பொன்மேனியைச் சிதம்பரத்தில் நிறுவிவிட்டு செப்பு மேனியைத் தென்னாட்டிற்கு எடுத்து செல்ல இறை பணிக்க அவ்வாறு செய்தான். முதலில் தயாரித்த செப்புமேனியைத் தலைமேல் சுமந்துகொண்டு நமசிவாயமுத்து செல்லும்போது, ‘எந்த இடத்தில் அதன் பாரத்தைத் தாங்கமுடியாமல் இருக்கின்றதோ அங்கு அதை கீழே வைக்க’ என்று அசரீரி எழுந்தது.
உலகின் முதல் நடராஜர் சிலை...
Published on

உலகின் முதல் நடராஜர் சிலை நெல்லை மாவட்டம் செப்பறை என்ற தலத்தில் உள்ளது.

சோழநாட்டை இரணியவர்மன் ஆட்சி செய்து வரும்போது அவனுக்கு ஏற்பட்ட நோயை எந்த வைத்தியத்தினாலும் சரிசெய்ய முடியவில்லை. கானகத்தில் அலைந்து திரிந்து கொண்டிருந்த அவன் பேச்சு சப்தம் கேட்டு நின்றான்.

அங்கு இருந்த பதஞ்சலி, வியாக்ரபாதர் முனிவர்களை வணங்கி தன் நிலையைக் கூற அவர்கள் அருகிலுள்ள குளத்தில் நீராடி வரும்படி சொல்ல அவ்வண்ணம் நீராடியவனுக்கு அவன் நேய் நீங்கியது கண்டான்.

திரும்பி வந்து பார்த்தபோது முனிவர்கள் இருவருக்கும் இறைவன் தில்லைக் கூத்து ஆடிக்காட்டிக் கொண்டிருந்தான். மகிழ்ந்த மன்னன் ஊர் திரும்பியதும் தானும் முனிவர் பெருமக்களும் கண்டு களித்த இறைவனின் ஆனந்தக் கூத்தினை உலக உயிர்கள் அனைத்தும் கண்டு களித்திட எண்ணி அந்த உருவத்தைச் சிற்பமாக வடிக்க நமசிவாய முத்து என்ற சிற்பிக்குக் கட்டளையிட்டான்.

சிற்பியும் அப்பணியைச் செவ்வனே செய்து முடிக்க, செப்பு உலோக மேனியைக் கண்டவனுக்கு பொன்மேனியாக காண ஆவலேற்பட சிற்பியிடம் சொல்லி பொன்னால் சிலை செய்து மகிழ்ந்தான்.

ஆனால், மன்னன் கண்களுக்கு பொன்னாகத் தெரிந்த சிலை மற்றவர்களுக்குச் செம்பாகத் தெரிய, வருத்தமடைந்த மன்னன் கனவில் பொன்மேனியைச் சிதம்பரத்தில் நிறுவிவிட்டு செப்பு மேனியைத் தென்னாட்டிற்கு எடுத்து செல்ல இறை பணிக்க அவ்வாறு செய்தான்.

முதலில் தயாரித்த செப்புமேனியைத் தலைமேல் சுமந்துகொண்டு நமசிவாயமுத்து செல்லும்போது, 'எந்த இடத்தில் அதன் பாரத்தைத் தாங்கமுடியாமல் இருக்கின்றதோ அங்கு அதை கீழே வைக்க' என்று அசரீரி எழுந்தது.

மணப்படை வீடு என்ற ஊரைத் தலையிடமாகக் கொண்டு ஆட்சி செய்துவந்த இராமபாண்டியன், வடகரை இராஜவல்லிபுரத்தில் இருந்து தினமும் தாமிரபரணியில் குளித்து தென்கரையில் நெல்லையப்பர்- கந்திமதி ஆலயத்தில் தரிசனம் முடித்தே ஆகாரம் எடுப்பது வழக்கம். அன்று தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட ஆற்றைக்கடந்து தரிசனம் செய்யமுடியவில்லை.

வருத்தமுற்ற மன்னன் கனவில் சிதம்பரத்திலிருந்து ஸ்தபதி ஒருவர் சிலை ஒன்றை சுமந்து வந்து பாரம் தாங்காமல் அரண்மணைக்கருகில் கீழே வைத்து விடுவார். அப்போது அது மறைந்து இலுப்பை வனத்தில் சதங்கை ஒலிக்கும் இடத்தில் தேடினால் கிடைக்கும். அதை எடுத்து தனியறையில் நிறுவி வழிபடு என்று சொல்லி மறைந்தார். மன்னன் அச்சிலையை இலுப்ப வனத்தில் கண்டு ஒரு செப்பு அறையை ஏற்படுத்தி நிறுவினான். பின்னர் நெல்லையப்பரையும் காந்திமதியையும் எழுந்தருளச் செய்து சிவாலாயம் கட்டினான். இத்தலம் செப்பறை என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ளதே உலகின் முதல் நடராஜர் திருமேனி.

திருநெல்வேலியில் இருந்து சுமார் 8 கி.மீ. தூரத்தில் உள்ளது இராஜவல்லிபுரம். இங்கே தாமிரபரணியின் கரையில் அமைந்துள்ளது செப்பறை அழகிய கூத்தர் கோவில்.

சிதம்பரம் மற்றும் நெல்லை மாவட்டத்திலுள்ள செப்பறை, கரிசூழ்ந்தமங்கலம், கரிவேலாங்குளம், கட்டாரிமங்களம் ஆகிய ஊர்களில் உள்ள ஐந்து ஆடவல்லான் சிலைகள் ஒரே சிற்பியால் வடிவமைக்கப்பட்டவை ஆகும்.

-வீரமணி

X

Maalai Malar
www.maalaimalar.com