குடும்ப பகையால் நிகழ்ந்த சிறுவன் கொலை: மதச்சாயம் பூசி பொய்யான தகவலுடன் பரவும் வீடியோ

ஜூலை 22 அன்று உத்தர பிரதேசத்தில் உள்ள தாகுர்கஞ்ச் பகுதியில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட சிறுவனும், இறந்துபோன சிறுவனும் ஒரே மதத்தை சேர்ந்தவர்கள்.
குடும்ப பகையால் நிகழ்ந்த சிறுவன் கொலை: மதச்சாயம் பூசி பொய்யான தகவலுடன் பரவும் வீடியோ
Published on

சமீபத்தில் ஒரு இந்து சிறுவன், முஸ்லிம் சிறுவன் ஒருவனை குளத்தில் தள்ளி கொன்றதாக கூறி ஒரு வீடியோ இணையத்தில் பகிரப்பட்டது.

"இந்துக்களுக்கும் இந்து தீவிரவாதிகளுக்கும், முஸ்லிம்களின் மேல் உள்ள வெறுப்பு கற்பனை செய்து பார்க்க முடியாதது. லக்னோ நகரில் கிஷோர் எனும் இந்து சிறுவன் ஒருவன், 7-வயதான அப்துல் சமத் எனும் முஸ்லிம் சிறுவனை வீட்டிலிருந்து அழைத்துச் சென்று, குழியில் தள்ளி கொலை செய்துள்ளான். இக்கொலை கண்காணிப்பு கேமராவில் பதிவு செய்யப்பட்டு, 6 பேர் மேல் கொலை குற்றம் சாட்டப்பட்டு, 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்." எனும் செய்தியுடன் ஒரு பயனரால் இந்த வீடியோ பகிரப்பட்டது.

ஆனால் கடந்த ஜூலை 24ஆம் தேதி வெளிவந்த அதிகாரப்பூர்வ செய்திகளின்படி, இறந்த குழந்தையின் தந்தை அகமது சஃபி என்பவர், முஸ்லிம் மதத்தை சேர்ந்த தனது அண்டை வீட்டுக்காரர்களான ஹ்யூமா, அதிக், சைக்கா, அரிஃப், கலித் மற்றும் அந்த குழந்தையை தள்ளி விட்ட சிறுவன் ஆகியோர் மீது கொலை குற்றம் சாட்டி காவல்துறையிடம் புகாரளித்தார்.

"எங்கள் இரு குடும்பங்களுக்குமிடையே இருந்த பகையின் காரணமாக, அவர்கள் அந்த சிறுவனை அனுப்பி என் மகனை கொலை செய்திருக்கின்றனர்" என அப்புகாரில் அகமது தெரிவித்திருக்கிறார்.

ஜூலை 22 அன்று உத்தர பிரதேசத்தில் உள்ள தாகுர்கஞ்ச் பகுதியில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. காலா பாஹத் எனும் பகுதியில் ஒரு நீர்நிலையில் இறந்த சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

"இந்த குற்றத்தில் எந்த மத சம்பந்தமும் இல்லை. குற்றம் சாட்டப்பட்டவர்களும், பாதிக்கப்பட்டவர்களும் ஒரே மதத்தை சேர்ந்தவர்கள்" என லக்னோ மேற்கு பிராந்திய காவல்துறை துணை ஆணையர் சிரஞ்சீவ் நாத் சின்ஹா தெரிவித்தார்.

ஆக, முஸ்லிம் இனத்தை சேர்ந்த இரு குடும்பங்களின் விரோதத்தால் நிகழ்ந்த ஒரு சோக சம்பவத்திற்கு, மத சாயம் பூசும் முயற்சியுடன் இந்த பொய்யான தகவலுடன் வீடியோ பகிரப்பட்டுள்ளது என்பது இதன் மூலம் உறுதியாகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com