உண்மை எது: புர்ஜ் கலிஃபாவில் பாகிஸ்தான் கொடி ஒளிரவில்லை என தவறுதலாக பரவிய வீடியோ

ஆகஸ்ட் 14 பாகிஸ்தானின் சுதந்திர தினமாகவும், ஆகஸ்ட் 15 இந்திய சுதந்திர தினமாகவும் கொண்டாடப்படுகிறதுஇந்தியா என்னவாக வேண்டும் என விரும்பியதோ அதனை பொறுத்தே எல்லாம் அமைந்திருக்கிறது
உண்மை எது: புர்ஜ் கலிஃபாவில் பாகிஸ்தான் கொடி ஒளிரவில்லை என தவறுதலாக பரவிய வீடியோ
Published on

பிரிட்டிஷ் அரசாங்கத்தால் அடிமைப்படுத்தப்பட்டு இருந்த ஒன்றுபட்ட இந்தியா, 1947 ஆகஸ்ட் மாதம், சுதந்திரத்தின் போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இரு நாடுகளாக பிரிவினை செய்யப்பட்டது.

இதனையொட்டி வருடாவருடம் ஆகஸ்ட் 14 பாகிஸ்தானின் சுதந்திர தினமாகவும், மறுநாளான ஆகஸ்ட் 15 இந்திய சுதந்திர தினமாகவும் கொண்டாடப்படுகிறது.

சென்ற வாரம் இந்தியாவின் 77வது சுதந்திர தினம் மிக விமரிசையாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்தியா சமீபகாலமாக பல நாடுகளுடன் நல்லுறவை வளர்ப்பதில் முயற்சி எடுத்து வருகிறது. இதில் அரபு நாடுகளும் அடங்கும்.

அரபு நாடான துபாயில் உள்ள உலகிலேயே மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபா, இந்திய சுதந்திர தினத்தை குறிக்கும் விதமாக கட்டிட வெளிப்புறம் முழுவதும் பல்வேறு அலங்கார ஒளி வடிவங்களால் இந்திய மூவர்ண கொடியை அழகாக பரவ விட்டிருந்தது. இது காண்போரை பரவசப்படுத்தியது.

இக்காட்சி உலகெங்கும் சமூக வலைதளத்தில் வைரலானது.

இந்நிலையில் பாகிஸ்தானின் சுதந்திர தினமான ஆகஸ்ட் 14ம் தேதியை குறிக்கும் விதமாக புர்ஜ் கலிஃபா அலங்கார மின்னொளி காட்சிகளை வெளிப்படுத்தவில்லை என ஒரு வீடியோ பரவியது.

இதனை பரவலாக்கியவர்களில் ஒரு பயனர், "பாகிஸ்தானின் சுதந்திர தினத்தன்று அதனை ஏமாற்றிய புர்ஜ் கலிஃபா, இந்திய சுதந்திர தினத்தன்று மூவர்ண கொடியை ஒளிர செய்திருக்கிறது. ஒரே சுதந்திர போர்தான், ஒரே சுதந்திரம்தான். ஆனால் இந்தியா என்னவாக வேண்டும் என விரும்பியதோ அதனை பொறுத்தே எல்லாம் அமைந்திருக்கிறது" என இந்தியாவை பாராட்டும் விதமாக ஒரு குறுஞ்செய்தியையும் இதனுடன் பதிவு செய்திருந்தார்.

உண்மையில் நடந்தது என்னவென்றால், புர்ஜ் கலிஃபாவில் ஆகஸ்ட் 14 -ம் தேதி மாலை 07:50 மணிக்குத்தான் பாகிஸ்தான் கொடி ஒளிர செய்யப்பட்டது. ஆனால், அக்கட்டிடத்திற்கருகே பாகிஸ்தானியர்கள் ஆகஸ்ட் 14 அன்று, நாள் தொடங்கும் நள்ளிரவு நேரத்தில் கூடியிருந்தனர்.

அவர்களில் ஒரு பெண் "மணி 12:01 ஆகிறது. ஆனால் பாகிஸ்தான் கொடி கட்டிடத்தில் ஒளிரப்படவில்லை" என ஒரு வீடியோவை வெளியிட்டார். இது சமூக வலைதளங்களில் வைரலானது.

இதனை நம்பிய ஒரு சில இந்தியர்கள், மறு நாள் இந்திய மூவர்ண கொடியால் ஒளிரும் புர்ஜ் கலிஃபாவையும், அப்பெண்மணி பரப்பிய செய்தியையும் இணைத்து தவறுதலாக ஒரு வீடியோவை பகிர்ந்து இருக்கின்றர்.

அந்த வகையில், புர்ஜ் கலிஃபாவில் பாகிஸ்தான் கொடி தாமதமாக ஒளிர செய்ததே, இந்த தகவல் பரவ காரணமாகி விட்டது. உண்மையில், இந்திய தேசிய கொடியை போன்றே, பாகிஸ்தானின் கொடியும் புர்ஜ் கலிஃபாவில் ஒளிர செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com