search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தான் அணியின் புதிய கேப்டனாக பாபர் அசாம் நியமனம்
    X

    டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தான் அணியின் புதிய கேப்டனாக பாபர் அசாம் நியமனம்

    • விரைவில டி20 உலகக் கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது
    • டி20 உலகக் கோப்பையில் குரூப் ஏ பிரிவில் பாகிஸ்தான் இடம்பெற்றுள்ளது

    இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் ஜொலிக்காததைத் தொடர்ந்து பாபர் அசாம் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார்.

    இதனால் ஷாஹீன் அப்ரிடி பாகிஸ்தான் டி20 அணி கேப்டனாக நியமிக்கப்பட்டார். இவரது தலைமையில் நியூசிலாந்து அணிக்கெதிராக பாகிஸ்தான் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் பாகிஸ்தான் 1-4 எனத் தோல்வியடைந்தது.

    விரைவில டி20 உலகக் கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது. டி20 உலகக் கோப்பை, டி20 அணியின் எதிர்கால திட்டம், பயிற்சியாளர் நியமனம் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு மற்றும் பாகிஸ்தான கிரிக்கெட் போர்டு தலைவர் மோசின் நக்வி ஷாஹீன் அப்ரிடியிடம் கலந்து ஆலோசனை நடத்தவில்லை. இது ஷாஹீன் அப்ரிடிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    இதற்கிடையே பாபர் அசாம் உடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இதில் ஷாஹீன் அப்ரிடி கலந்து கொள்ளவில்லை. கேப்டனாக தொடரை வைக்க விருப்பம் இல்லை என்றால் தன்னை நீக்கி விட்டு, அதற்கான காரணத்தை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என ஷாஹீன் அப்ரிடி எதிர்பார்க்கிறார்.

    மேலும் அவருக்கு நெருக்கமான சிலர் கேப்டன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தொடர்பான குழப்பத்தில் இருந்து விலகி இருக்க வலியுறுத்தியுள்ளனர். இதனால் ஷாஹீன் அப்ரிடி கேப்டன் பதவியை ராஜினாமா செய்யலாம் என சொல்லப்பட்டது.

    இந்நிலையில், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணியின் புதிய கேப்டனாக பாபர் அசாம் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் மோசின் நக்வி தெரிவித்துள்ளார்.

    2022-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக் கோப்பையில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டி வரை சென்றது. ஆதலால் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறும் உலகக்கோப்பை போட்டியில் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    டி20 உலகக் கோப்பையில் குரூப் ஏ பிரிவில் பாகிஸ்தான் இடம்பெற்றுள்ளது. இந்த பிரிவில் இந்தியா, அயர்லாந்து, கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய அணிகளை பாகிஸ்தான் எதிர்கொள்கிறது.

    Next Story
    ×