

தனியார் தமிழ் தொலைக்காட்சியில் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. பிரபலமான நபர்கள் ஒரே வீட்டில் ஒன்றாக 100 நாட்கள் இருக்குமாறு இந்த நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் நடிகர் கமல்ஹாசன் இதனை தொகுத்து வழங்குகிறார்.
இந்நிகழ்ச்சியில் ஒரு பங்கேற்பாளராக நடிகை ஓவியா கலந்து கொண்டிருந்தார். பின்னர், பல்வேறு விவகாரங்கள் காரணமாக நிகழ்ச்சியின் பாதியிலேயே அவர் வெளியேறினார். ஆரவ் உடன் ஏற்பட்ட காதல் தொடர்பாக பிக்பாஸ் அரங்கில் அவர் தற்கொலைக்கு முயன்றதாக செய்திகள் வெளியாகின.
தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் இருக்க முடியாத அளவுக்கு மனநிலை பாதிக்கப்பட்டதால் நடிகை ஓவியா நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி சொந்த ஊரான கேரள மாநிலம் கொச்சிக்கு சென்றுவிட்டார். அங்கு அவர் மனநல சிகிச்சை பெறுவது போன்ற புகைப்படங்களும் தொடர்ந்து ரசிகர்களுடன் இருக்கும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
இந்நிலையில், கொச்சியில் உள்ள தனது இல்லத்திலிருந்து வீடியோ மூலமாக ஓவியா சில விளக்கங்களை அளித்துள்ளார். அதில், முக்கியமாக மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க வாய்ப்பில்ல என தெரிவித்துள்ளார். நல்ல கதை அம்சமுள்ள திரைப்படங்களில் கவனம் செலுத்தப்போவதாகவும் கூறியுள்ளார்.