விஷால் நிறுவனத்தில் கையாடல் - கணக்காளர் ரம்யா பற்றி அதிரடி அறிக்கை

நடிகர் விஷால் நிறுவனத்தில் பணிபுரிந்த கணக்காளர் ரம்யா பற்றி விஷால் ஃபிலிம் பேக்டரி நிறுவனம் அதிரடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
விஷால்
விஷால்
Published on

நடிகர் விஷாலுக்கு சொந்தமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தில் ரூ.45 லட்சம் பணத்தை கையாடல் செய்ததாக அந்நிறுவனத்தில் பணியாற்றிய கணக்காளர் ரம்யா மீது சமீபத்தில் புகாரளிக்கப்பட்டது.

இந்தப் புகாரை அடுத்து அலுவலக ஊழியர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்திய விருகம்பாக்கம் போலீஸ், பெண் கணக்காளர் ரம்யா மீது மோசடி, போலி ஆவணங்களை தயாரித்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில் கணக்காளர் ரம்யாவிடம் விஷால் பிலிம் பேக்டரி கணக்கு தொடர்பான எந்த விஷயங்களிலும் அவரை தொடர்பு கொள்ள வேண்டாம் என்று அந்நிறுவனம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, “எங்கள் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தில் கணக்காளராக பணிபுரிந்த ரம்யா, நிறுவனத்தில் பல வருடங்களாக வங்கிக் கணக்குகளை முறைகேடாக பயன்படுத்தி ரூ.45 லட்சம் வரை ஏமாற்றியுள்ளார் என்பதை கண்டறியப்பட்டு 30.06.2020 அன்று காவல்துறையில் புகாரளிக்கப்பட்டு விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் மோசடி தொடர்புடைய பிரிவின் கீழ் 7-07-2020 அன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளார்.

எனவே ரம்யா இனி எங்கள் நிறுவனமான விஷால் ஃபிலிம் பேக்டரியில் பணியாற்றவில்லை என்று தெரிவித்துக் கொள்கிறோம். விஷால் ஃபிலிம் பேக்டரி கணக்கு தொடர்பான எந்த விஷயங்களிலும் இனிமேல் ரம்யாவை தொடர்பு கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. மேலும் மீறி தொடர்பு வைத்துக் கொண்டால் நிர்வாகம் பொறுப்பல்ல என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com