

திரையரங்கு உரிமையாளர்கள், தமிழக அரசு அதிகாரிகள் இன்று மாலை நடத்திய பேச்சுவார்த்தையில், திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக அரசு அதிகாரிகள் வாக்குறுதி கொடுத்ததால் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்படுவதாக திரையரங்க உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
8 சதவீத கேளிக்கை வரி, திரையரங்கு உரிமம் புதுப்பிப்பு, பராமரிப்பு கட்டணம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 16-ஆம் தேதி முதல் சென்னை தவிர்த்து தமிழ்நாடு முழுவதும் தியேட்டர்களை மூடி திரையரங்கு உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், திரையரங்கு உரிமையாளர்கள், தமிழக அரசு அதிகாரிகள் இடையே இன்று மாலை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இதில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, கே.சி.வீரமணி திரையரங்கு உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் ஒன்றரை மணி நேரம் வரை நடந்த இந்த பேச்சுசார்த்தையின் முடிவில், திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக அமைச்சர்கள் வாக்குறுதி அளித்துள்ளதால் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமாதன், போராட்டத்தை திரும்பப் பெறுவதாகவும், நாளை முதல் திரையரங்குகள் வழக்கம்போல் இயங்கும் என்றும் தெரிவித்தார். #TheatresStrike